பெங்களூரு: 2026 ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் வேளையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மீண்டும் போட்டிகளை நடத்த கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது. கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் (KSCA) கோரிக்கையை ஏற்று, கடுமையான நிபந்தனைகளுடன் போட்டிகளை நடத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி தனது முதல் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. ஜூன் 4 ஆம் தேதி இந்த வெற்றியைக் கொண்டாட மைதானத்திற்கு வெளியே திரண்ட ரசிகர்களிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த கர்நாடக அரசு அதிரடியாகத் தடை விதித்திருந்தது.
மைதானத்திற்கு விதிக்கப்பட்ட தடையால், அங்கு நடைபெறவிருந்த மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பைக்கு மாற்றப்பட்டது. இதனால் சொந்த மண்ணில் கிரிக்கெட் போட்டிகளைக் காண முடியாமல் பெங்களூரு ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும், வரும் 2026 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி தனது சொந்த மைதானத்தில் விளையாடுமா என்ற சந்தேகமும் எழுந்தது.
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், மைதானத்தைத் திறக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். ஐபிஎல் மற்றும் சர்வதேசப் போட்டிகளை மீண்டும் பெங்களூருவிற்குக் கொண்டுவர வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று அவர் கூறியிருந்தார். இதற்காக அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைக்கப்பட்ட குன்ஹா குழுவின் அறிக்கையின் அடிப்படையில், சில நிபந்தனைகளுடன் மைதானத்தைத் திறக்க அரசு அனுமதித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், "மைதானத்தில் ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதன்படி, ஒரு போட்டிக்கு அதிகபட்சமாக 35,000 ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.
சின்னசாமி மைதானத்தில் அனுமதி கிடைக்காவிட்டால், நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் மைதானம் அல்லது ராய்ப்பூர் மைதானத்தை தனது சொந்த மைதானமாக மாற்ற ஆர்சிபி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. ஆனால் மும்பை வான்கடே மைதானத்திற்கு அருகில் இருப்பதால், டிஒய் பாட்டீல் மைதானத்தை ஆர்சிபி தேர்வு செய்ய மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
தற்போது கர்நாடக அரசின் இந்த அறிவிப்பால் ஆர்சிபி நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். நடப்புச் சாம்பியனான ஆர்சிபி அணி, வரும் சீசனில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கோப்பையைத் தக்கவைக்கப் போராடும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆர்சிபி நிர்வாகம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.