பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஆதித்ய பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு முழுமையாக வாங்கியுள்ளது. யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து சுமார் 1.78 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹16,706 கோடி) மதிப்பில் ஆர்சிபி அணி கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த கூட்டமைப்பில், டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், போல்ட் வென்ச்சர்ஸ், மற்றும் பிளாக்ஸ்டோனின் பெர்ப்பெச்சுவல் பிரைவேட் ஈக்விட்டி" முதலீட்டு நிறுவனம் ஆகியவையும் இணைந்துள்ளன. இருப்பினும், ஆதித்ய பிர்லா குழுமமே இதற்குத் தலைமை தாங்குகிறது.

"ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (ஆர்.சி.எஸ்.பி.எல்) நிறுவனத்தில் தங்களுக்குச் சொந்தமான 100% பங்குகளை ஒரு கூட்டமைப்புக்கு விற்பதற்கான திட்டவட்டமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டதை, இன்று தங்கள் இயக்குநர்கள் குழு கூட்டத்திற்குப் பிறகு யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் அறிவித்தது,"

அந்த அறிக்கையின்படி, "ஆதித்ய பிர்லா குழுமம் (ABG), டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் (Times), போல்ட் வென்ச்சர்ஸ் (Bolt), மற்றும் பிளாக்ஸ்டோனின் "பெர்ப்பெச்சுவல் பிரைவேட் ஈக்விட்டி" (BXPE) ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த கூட்டமைப்பு, மொத்தமாக ₹166.6 பில்லியன் தொகையை ரொக்கமாகச் செலுத்துவதன் மூலம் ஒப்பந்தத்தை மேற்கொண்டது." இந்த விற்பனையில் ஆர்.சி.பி. ஆண்களுக்கான அணி மற்றும் டபிள்யூ.பி.எல். பெண்களுக்கான அணி ஆகிய இரண்டும் அடங்கும்.
இதற்கிடையில், இந்த அணியின் புதிய தலைவராக, ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவின் மகன் ஆர்யமன் பிர்லா நியமிக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.யார் இந்த ஆர்யமன் பிர்லா? என்று தேடினால், இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடியது தெரியவந்துள்ளது.
அவர் ஜூலை 9, 1997 அன்று பிறந்தார். பிரபல ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லாவின் மகனான ஆர்யமன், ஒரு தொழில்முனைவோர் மற்றும் முன்னாள் தொழில்முறை கிரிக்கெட் வீரர் ஆவார்.ஆர்யமன் பிர்லா இடது கை பேட்ஸ்மேனாக வலம் வந்தார். அவர் மத்தியப் பிரதேச கிரிக்கெட் அணிக்காக உள்நாட்டுப் போட்டிகளில், அதாவது முதல் தர மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.
அவர் ஒன்பது முதல் தரப் போட்டிகளில் 414 ரன்கள் அடித்துள்ளார், இதில் ஒரு சதமும் அடங்கும். மேலும், ஆர்யமன் பிர்லா, தற்போதைய ஆர்.சி.பி.யின் கேப்டன் ரஜத் பட்டிதாருடன் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிச் சிறப்பாக விளையாடியுள்ளார்.
2018 ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது ஆர்யமன் பிர்லாவுக்கு அங்கீகாரம் கிடைத்தது. திறமை இருந்தபோதிலும், மனநல சவால்களைக் காரணம் காட்டி 2019 இல் அவர் தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து விலகினார்.

கிரிக்கெட்டிலிருந்து விலகிய பிறகு, ஆர்யமன் தனது கவனத்தை வணிகம் மற்றும் தொழில்முனைவில் செலுத்தினார். குறிப்பாக இ-காமர்ஸ் மற்றும் சில்லறை வர்த்தகம் போன்ற துறைகளில், ஆதித்ய பிர்லா குழுமத்துடன் இணைந்த செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டார். அவர் ஸ்டார்ட்அப்கள் மற்றும் டிஜிட்டல் புதுமைகளிலும் ஆர்வம் காட்டி வந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர் ஒருவர் தற்போது ஆர்சிபி அணியை வாங்கி இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.