பெங்களூர்: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் நடப்பு சாம்பியனாக ஆர் சி பி அணி களமிறங்குகிறது. 18 சீசன்களில் முதன் முறையாக ஆர்சிபி அணி கடந்த முறைதான் கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் ஆர்சிபி அணி தற்போது புதிய சீசனில் எங்கு விளையாட போகிறோம் என்ற தெளிவு இல்லாமலே களம் இறங்கப் போகிறது.
பெங்களூருவில் போட்டிகள் நடத்தப்பட தடை விதிக்கப்பட்டு இருப்பதால், ஆர் சி பி அணி அடுத்த சீசனில் புது மைதானத்தை தேர்ந்தெடுக்க போகிறது. இதனால் அதற்கு ஏற்ற வகையில் அணியை மாற்ற அந்த அணி முயற்சி எடுத்து வருகிறது.

இந்த நிலையில் ஆர்சிபி அணி 8 வீரர்களை அதிரடியாக நீக்கி இருக்கிறது. அது யார் என்று தற்போது பார்க்கலாம். ஆர்சிபி அணி, இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோனை நீக்கிவிட்டது. கடந்த 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி அணிக்காக விளையாடிய அவர் 10 போட்டிகளில் மொத்தமாகவே 112 ரன்கள் தான் அடித்திருந்தார்.
இதில் ஒரு அரை சதம் அடங்கும். பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார். இதேபோன்று கடந்த சீசனில் கடைசி கட்டத்தில் அணிக்கு வந்த மாயங் அகர்வாலும் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இதே போல் ஸ்வஸ்திக் சிக்காரா என்ற வீரரும் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ள அதிரடி விக்கெட் கீப்பர் டிம் செபர்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
இதை போன்று பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்கா வீரர் லுங்கி நெகிடி, ஜிம்பாப்வே வீரர் பிளசிங் முஸ்ரபாணி, சுழற் பந்துவீச்சாளர், மோகித் ராதே மற்றும் ஆல்ரவுண்டர்கள் மனோஜ் பங்கடி ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கின்றனர்.விராட் கோலி, அடுத்த சீசனில் தொடர்வாரா என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் ஆர்சிபி அணியில் தக்கவைக்கப்பட்டிருக்கிறார். இதேபோன்று வழக்குகள் சிலவற்றின் சிக்கிய வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயால் தக்கவைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஆர் சி பி அணியிடம் 16 கோடியே 40 லட்சம் ரூபாய் கையிருப்பு தொகை இருக்கிறது.