பெங்களூரு: ஐபிஎல் 2026ஆம் ஆண்டு சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் மங்கேஷ் யாதவை ₹5.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. திறமையான இளைஞர்களுக்கு ஐபிஎல் வாழ்கையே மாற்றும் கனவு மேடையாக அமைந்துள்ளது. பல வீரர்கள் திறமை மட்டுமே நம்பி உழைத்து வரும் நிலையில், அவர்கள் வாழ்க்கையில் ஒளியை ஏற்றி வைத்திருக்கிறது.
இதற்கு மங்கேஷின் ஒப்பந்தம் அதற்கு ஒரு வாழும் உதாரணம். மங்கேஷின் வெற்றி பல சவால்கள் நிறைந்தது. அதிகாலைகளில் லாரி ஓட்டி குடும்பத்தை நடத்திய லாரி ஓட்டுநர் ராம் அவாத்தின் மகன் தான் மங்கேஷ் ஆவார். இவர் தனது கிரிக்கெட்டை மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் முழுவதும் டென்னிஸ் பந்து போட்டிகளில் ஆடித் தொடங்கினார்.

வொண்டர் கிரிக்கெட் கிளப்பின் பயிற்சியாளர் பூல்சந்த் சர்மா, மங்கேஷின் திறமையால் கவரப்பட்டு, மூன்று வருட விடுதிக் கட்டணம் செலுத்திப் பயிற்சிக்கு உதவினார். 2025 மத்தியப் பிரதேச டி20 லீக்கில் 14 விக்கெட் வீழ்த்தி 'தொடரின் சிறந்த வீரர்' விருதை வென்றார். 2025-26 சையத் முஷ்டாக் அலி டிராபியில் சில ஆட்டங்களில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். பேட்டிங்கிலும் கீழ் வரிசையில் பெரிய ஷாட் ஆடக் கூடியவர். இதனால் தான் ஆர்சிபி அணி இவருக்கு பெரிய தொகையை தந்துள்ளது.

ஐபிஎல் பயிற்சிகளில் ஆர்சிபி பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்கை மங்கேஷ் கவர்ந்தார். அவரது ஒழுக்கமும், துல்லியமான பந்துவீச்சுத் திறனும் கார்த்திக்கை ஈர்த்தன. இதனால், ₹5.2 கோடிக்கு இளம் வேகப்பந்து வீச்சாளரான மங்கேஷை RCB ஒப்பந்தம் செய்தது. தற்போது மங்கேஷ் விராட் கோலி போன்ற ஜாம்பவான்களுக்கு வலைப் பயிற்சியில் பந்துவீசி வருகிறார்.

ஆர்சிபி அணி, முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த சூழலில் மங்கேஷ்க்கு முதல் போட்டியில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், நிச்சயம் இந்த தொடரில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விரைவில் இந்திய அணிக்காகவும் விளையாடுவார் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.