பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16,706 கோடி ரூபாய்க்கு பிரம்மாண்டமாக விற்கப்பட்ட நிலையில், அதன் புதிய உரிமையாளர்கள் அணியின் பெயரை மாற்றுவார்களா? என்ற மிகப்பெரிய கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதற்கு ஆதித்யா பிர்லா குழுமத்தின் முக்கிய முகமான அனன்யா பிர்லா தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் வசம் இருந்த ஆர்சிபி அணியின் 100 சதவீத பங்குகளையும், ஆதித்யா பிர்லா குழுமம், பிளாக்ஸ்டோன், போல்ட் வென்ச்சர்ஸ் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் ஆகியவை இணைந்த புதிய முதலீட்டுக் குழு வாங்கியுள்ளது. சுமார் 1.78 பில்லியன் டாலர் அதாவது 16706 கோடி ரூபாய் கொடுத்து முழுவதுமாக ரொக்கப் பரிவர்த்தனை மூலம் இந்த அணி கைமாறியுள்ளது.

இதில் ஆண்களுக்கான ஐபிஎல் அணி மற்றும் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் அணி என இரண்டுமே அடங்கும். இந்த பிரம்மாண்ட விற்பனையின் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட அணி என்ற மாபெரும் சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது. புதிய உரிமையாளர்கள் வந்திருப்பதால், அணியின் பெயரில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் என்ற வார்த்தை மாற்றப்படலாம் என சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவின.
இந்நிலையில், ஆதித்யா பிர்லா குழுமத்தின் அனன்யா பிர்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு முக்கிய பதிவை பகிர்ந்துள்ளார். அதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பெயர் எந்த வகையிலும் மாற்றப்படாது என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பல ஆண்டுகளாக அணியை ஆதரித்து வரும் ஆர்சிபி ரசிகர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஆர்சிபி அணி, பல ஆண்டுகளாக கோப்பையை வெல்லாமல் தவித்து வந்தது. இறுதியாக கடந்த 2025 ஆம் ஆண்டு தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. கடந்த 2025 நவம்பர் 5 ஆம் தேதி யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனம் தொடங்கிய இந்த பங்குகளின் விற்பனை நடைமுறை தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளது. புதிய நிர்வாகத்தின் கீழ் ஆர்சிபி அணி 2026 ஐபிஎல் தொடரை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
