IPL 2026: "180 ரன்கள் எடுத்திருந்தால்.." - தோல்விக்கு பின் குஜராத் கேப்டன் சுப்மன் கில் உருக்கம்
அகமதாபாத்: 2026 ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து கோப்பையைத் தவறவிட்ட பிறகு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் தனது அணியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிய இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி, விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் 18 ஓவர்களில் இலக்கை எட்டி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

தோல்விக்குப் பிறகு பேசிய குஜராத் கேப்டன் சுப்மன் கில், "நாங்கள் பேட்டிங்கில் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும். இந்த ஆடுகளத்தில் 180 முதல் 190 ரன்கள் வரை எடுத்திருந்தால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்திருக்கும். ஆடுகளம் சற்று மந்தமாக இருந்தாலும், விளையாடக் கடினமாக இல்லை. ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான சூழல் இருந்தது. ஆனால், நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் ரன் குவிக்கும் வேகத்தை அதிகரிக்க முடியாமல் போனது" என்றார்.
பவர் பிளே சொதப்பல்
தொடர்ந்து பேசிய அவர், "156 ரன்கள் என்ற இலக்கைப் பாதுகாக்கும் போது, பவர் பிளே ஓவர்களில் 1 அல்லது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே ஆட்டத்திற்குள் வர முடியும் என நம்பினோம். ஆனால், பவர் பிளே ஓவர்களில் நாங்கள் 15 முதல் 20 ரன்கள் வரை கூடுதலாகக் கொடுத்துவிட்டோம். அவர்கள் எளிதாக ரன்களைக் குவித்து ஆட்டத்தை எங்கள் கையில் இருந்து பறித்துவிட்டனர்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
பந்துவீச்சாளர்களுக்குப் பாராட்டு
தோல்வி அடைந்தாலும் தனது அணியின் பந்துவீச்சாளர்களை கேப்டன் சுப்மன் கில் பாராட்டினார். "இந்த சீசனில் மிகச் சிறந்த பந்துவீச்சு அணியாக நாங்கள் செயல்பட்டோம். முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த பிறகும், நாங்கள் வலுவாக மீண்டு வந்து இறுதிப்போட்டி வரை முன்னேறினோம். ஒவ்வொரு போட்டியிலும் எங்களை நாங்களே சவாலுக்கு உட்படுத்தி மேம்படுத்திக் கொண்டோம். ஒட்டுமொத்தமாக இந்த சீசன் எங்களுக்கு மகிழ்ச்சியையே தந்துள்ளது" என்றார்.
இறுதியில், "கோப்பையை வெல்ல முடியாமல் போனது ஏமாற்றம் அளித்தாலும், இதில் இருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஒருவேளை நாங்கள் இன்று கோப்பையை வென்றிருந்தாலும், இன்னும் சில விஷயங்களை மேம்படுத்த வேண்டியிருக்கும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்" என முதிர்ச்சியுடன் தனது பேச்சை முடித்தார் சுப்மன் கில்.
இந்த சீசனில் குஜராத் அணியின் ககிசோ ரபாடா 29 விக்கெட்டுகளுடன் ஊதா தொப்பியைக் கைப்பற்றியது அந்த அணிக்கு ஓரளவுக்கு ஆறுதலாக அமைந்தது. கேப்டனாக முதல் சீசனிலேயே அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற சுப்மன் கில்லின் தலைமைப் பண்பிற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications
