IPL 2026: 10 ஆண்டுகளாக தடுமாறும் விராட் கோலி.. மீண்டும் பிளே-ஆஃப்பில் 50 ரன் அடிக்கத் தவறினார்!
தரம்சாலா: ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் விராட் கோலி சற்று தடுமாறுகிறாரோ என்ற விவாதம் இருந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் அரைசதம் அடிக்கத் தவறினார். இதன் மூலம் விராட் கோலி பத்து ஆண்டுகளாக இருந்த ஒரு மோசமான சாதனையை முறியடிக்கத் தவறினார்.
2026 ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தரம்சாலாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 254 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை துரத்திய குஜராத் அணி 162 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் வெறும் 33 பந்துகளில் 93 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு அஸ்திவாரம் போட்டார். அவருக்குத் துணையாக விராட் கோலி 43 ரன்களும், க்ருணால் பாண்டியா 43 ரன்களும் எடுத்தனர். 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி, பெங்களூருவின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இறுதியில் 162 ரன்களுக்கு அந்த அணி சுருண்டது.
இந்தப் போட்டியில் 43 ரன்கள் எடுத்த நட்சத்திர வீரர் விராட் கோலி, ஒரு முக்கியமான சாதனையைத் தவறவிட்டார். ஐபிஎல் பிளே-ஆப் சுற்றுகளில் அரைசதம் அடித்து 10 ஆண்டுகள் ஆகிறது என்ற அவரது நீண்ட காலக் காத்திருப்பு இன்றும் தொடர்கிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு ஐதராபாத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கோலி 54 ரன்கள் எடுத்திருந்தார். அதற்குப் பிறகு 2020-ல் 6 ரன், 2021-ல் 39 ரன், 2022-ல் 25 மற்றும் 7 ரன்கள், 2024-ல் 33 ரன், 2025-ல் 12 ரன் என நாக்-அவுட் போட்டிகளில் அவர் தொடர்ந்து தடுமாறி வருகிறார்.
இந்தப் போட்டியில் அவர் எடுத்த 43 ரன்களே 2016-க்குப் பிறகு பிளே-ஆப் சுற்றில் அவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 25 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் அவர் இந்த ரன்களைச் சேர்த்தார். கோலி அரைசதம் அடிக்கத் தவறினாலும், அணியின் மற்ற வீரர்கள் அதிரடி காட்டியதால் பெங்களூரு அணி எளிதாக வெற்றி பெற்றது.
நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் முனைப்பில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் மோசமாக ஆடி 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த குஜராத் அணி, மே 29 அன்று நடைபெறவுள்ள இரண்டாவது குவாலிபையர் போட்டியில் விளையாடி மீண்டும் இறுதிப்போட்டிக்குச் செல்ல முயற்சிக்கும்.


Click it and Unblock the Notifications
