IPL 2026: கடைசி ஓவரில் ரிங்கு சிங் செய்த செயல்.. மிரண்டு போன லக்னோ.. தோனி ரெக்கார்டும் காலி
லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் கடைசி ஓவரில் தொடர்ந்து 4 சிக்சர்களை விளாசி மிரட்டினார். இந்த ஆட்டத்தின் மூலம், 15 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த தோனியின் இமாலய சாதனை ஒன்றை ரிங்கு சிங் சுக்குநூறாக்கியுள்ளார். அந்த சாதனை என்ன, கடைசி ஓவரில் அப்படி என்ன நடந்தது?
லக்னோ ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்த லீக் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லக்னோ வேகப்பந்து வீச்சாளர் மோசின் கானின் அனல் பறக்கும் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீட்டுக்கட்டு போல சரிந்தது. முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 93 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி படுமோசமாக தத்தளித்தது.

இந்த நெருக்கடியான நிலையில் 6வது வீரராக களமிறங்கிய ரிங்கு சிங், தனது வழக்கமான பொறுப்பான மற்றும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விக்கெட்டுகள் சரிந்தாலும் துளியும் பதற்றமடையாத அவர் தனி ஒருவனாக அணியை சரிவில் இருந்து மீட்டார். ஆட்டத்தின் 20வது மற்றும் கடைசி ஓவரை வீச லக்னோ அணியின் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி வந்தார். அந்த ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடிய ரிங்கு சிங், அடுத்தடுத்து 4 பந்துகளில் 4 இமாலய சிக்சர்களை பறக்கவிட்டு மைதானத்தில் இருந்த அனைவரையும் மிரள வைத்தார். அந்த கடைசி ஓவரில் மட்டும் 26 ரன்கள் குவிக்கப்பட்டது.
தனது போராட்டத்தால் 51 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களுடன் 83 ரன்களை குவித்து ரிங்கு சிங் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்றார். கடைசி கட்டத்தில் சுனில் நரைனுடன் இணைந்து 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததால், கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எட்டியது. இந்த 83 ரன்கள் மூலம், ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றை ரிங்கு சிங் தனது பெயருக்கு மாற்றியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியின் முதல் இன்னிங்சில் 6வது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு, கடந்த 2011ல் ராயல்பெசேலஞ்சர்ஸ் ங்களூரு அணிக்கு எதிராக சிஎஸ்கே அணிக்காக 6வது வீரராக களமிறங்கிய தோனி ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் குவித்ததே கடந்த 15 ஆண்டுகளாக மிகப்பெரிய சாதனையாக இருந்து வந்தது.
தற்போது அதனை ரிங்கு சிங் அசால்ட்டாக முறியடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 6வது அல்லது அதற்கும் கீழ் களமிறங்கிய வீரர்களில் ஆண்ட்ரே ரஸல் (88 ரன்கள்) மட்டுமே ரிங்கு சிங்கை விட முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்துள்ளார். மேலும், இந்த 83 ரன்கள் ஐபிஎல் தொடரில் ரிங்கு சிங்கின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் கொல்கத்தா, லக்னோ ஆகிய இரு அணிகளும் 20 ஓவர்கள் முடிவில் 155 ரன்கள் எடுத்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. பின்னர் சூப்பர் ஓவரில் லக்னோ 1 ரன் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து கொல்கத்தா அணிக்காக களமிறங்கிய ரிங்கு சிங் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து வெற்றி பெற்றுத் தந்தார்.


Click it and Unblock the Notifications