லக்னோ: ஐபிஎல் 2026 ஆரம்பப் போட்டியில் லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தொடக்க வீரராகக் களமிறங்கினார். அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் விதமாக, தனது முன்னாள் அணியான டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக அவர் 9 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோரின் வெற்றிகரமான தொடக்க ஜோடியைப் பிரித்து, பந்த் தானே இம்முயற்சியில் இறங்கியது பலத்த விமர்சனங்களை ஈர்த்தது. துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் ஆகி ஒரு மோசமான தொடக்கத்தைக் கண்டாலும், வரவிருக்கும் போட்டிகளிலும் டாப் ஆர்டரில் தொடர்ந்து களமிறங்குவேன் என பந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.

லக்னோவில் நடைபெற்ற லக்னோ, டெல்லி போட்டிக்குப் பிறகு, ஐபிஎல் 2026 இன் எஞ்சிய போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராகத் தொடருவாரா என்ற கேள்விக்கு பந்த், “இது 50-50 முடிவு, ஆனால் கண்டிப்பாக டாப் ஆர்டரில் களமிறங்குவேன்,” என்று பதிலளித்தார்.
2025 ஐபிஎல் சீசனில் LSG-க்காக மூன்றாவது இடத்தில் சிறப்பாக விளையாடியிருந்த நிக்கோலஸ் பூரன், டெல்லிக்கு எதிராக இம்முறை ஐந்தாவது இடத்தில் களமிறங்கி 8 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். மார்க்ரம் மூன்றாம் இடத்திலும், ஆயுஷ் பதோனி நான்காம் இடத்திலும் களமிறக்கப்பட்டனர்.
பூரனை ஐந்தாம் இடத்திற்கும், பதோனியை நான்காம் இடத்திற்கும் தள்ளியதற்கான காரணத்தைப் பந்த் விளக்கினார். “நான் தொடக்க வீரராகக் களமிறங்கியதால், நடு ஓவர்களில் பூரான் பொறுப்பை ஏற்பார் என்பதே திட்டமாக இருந்தது. ஆரம்ப விக்கெட்டுகள் இழந்தால், பதோனி தனது திறமையைக் காட்ட ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது,” என்றார். 20, 30 ரன்கள் கூடுதலாக அடித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட பண்ட், தாம் ஆட்டமிழந்த முறை துரதிர்ஷ்டவமானது என்பதால், அதை பற்றி கவலைப்படாமல் நகர்ந்து செல்வது தான் சரியான முடிவாக இருக்கும் என்று கூறினார்.
2022 முதல் LSG-யுடன் இணைந்துள்ள ஆயுஷ் பதோனி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக மூன்று பந்துகளில் டக் அவுட் ஆனார். அவரை டி. நடராஜன் பெவிலியனுக்கு அனுப்பினார். டெல்லி கேபிடல்ஸின் டி. நடராஜன் தங்கள் முதல் போட்டியில் நான்கு ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடியும் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குல்தீப் யாதவ், நான்கு ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.