லக்னோ: ஐபிஎல் 2026 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பன்ட் தனது பேட்டிங் நிலையை மாற்றவுள்ளார். அவர் அணியின் மூன்றாவது பேட்டிங் இடத்தைப் பிடிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சீசனில், பன்ட் பெரும்பாலும் நான்காவது இடத்திலும், பிளேஆஃப் சுற்றுக்கு வெளியேற்றப்பட்ட பிறகு மட்டுமே கடைசி சில போட்டிகளில் மூன்றாவது இடத்திலும் விளையாடினார்.
தொடக்க வீரர் முதல் ஏழாவது இடம் வரை அவரது பேட்டிங் நிலை மாறி, 13.73 சராசரி மற்றும் 107.09 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அவர் 151 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஒரு போட்டியில் சதம் அடித்தது புள்ளிவிவரங்களை மேம்படுத்தியது. இந்த சீசனில் எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்குவர்.

பன்ட் மூன்றாவது இடத்தில் களமிறங்கி டாப் ஆர்டரை நிலைநிறுத்துவார். இதன் மூலம் நடுவரிசை சூழலுக்கு ஏற்ப மாறும். இதன் முலம் நிக்கோலஸ் பூரன் கீழ் வரிசையில் விளையாடலாம். ஆயுஷ் படோனி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது ஆகியோர் போட்டிச் சூழ்நிலைக்கு ஏற்ப நான்கு முதல் ஆறு இடங்களுக்குள் களமிறங்குவர். தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் துணைப் பணியாளர்கள் பன்ட்டின் புதிய பேட்டிங் பங்கு குறித்து இதே முடிவையே எடுத்துள்ளனர்.

"அணி நிர்வாகத்திற்கும் பன்ட்டிற்கும் அவரது ஆட்டம் மூன்றாவது இடத்திற்குச் சிறந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த சீசனில் டாப் ஆர்டர் எய்டன், மார்ஷ், பன்ட் என உறுதி செய்யப்பட்டுள்ளது. நடுவரிசை மாறக்கூடும். கள சூழ்நிலைக்கு ஏற்ப வீரர்கள் பயன்படுத்தப்படுவார்கள்," என தகவல்கள் தெரிவிக்கின்றன.
லக்னோ அணி சென்னையில் பயிற்சி முகாமை முடித்து, ஏப்ரல் 1 அன்று டெல்லி கேபிடல்ஸ் உடனான முதல் ஆட்டத்திற்காக லக்னோவில் பயற்சி எடுக்கிறது. கடந்த 2025 மெகா ஏலத்தில் சாதனை விலையான ₹27 கோடிக்கு வாங்கப்பட்ட பன்ட் ஒரு திருப்புமுனையில் உள்ளார்.

சிறப்பான செயல்பாடு அவருக்கு LSG-யில் இடத்தையும், இந்திய ஒருநாள், டி20 அணிகளில் வாய்ப்பையும் பெற்றுத் தரும். இல்லையேல், கடந்த ஆண்டைப்போன்ற மோசமான செயல்பாடு, இந்திய அணியில் இடம் பெறும் வாய்ப்பை இழக்கச் செய்வதுடன், LSG நிர்வாகத்தின் பொறுமையையும் சோதிக்கும். லக்னோ அணி தங்களுடைய முதல் போட்டியை ஏப்ரல் 1ஆம் தேதி டெல்லியுடன் எதிர்கொள்கிறது.