IPL 2026: "இதுல லாஜிக்கே இல்லை".. சாம்சனை கழட்டிவிட்டு இவருக்கு கேப்டன்சி ஏன்? மஞ்ச்ரேக்கர் விளாசல்
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவி ரியான் பராக்கிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பல ஆண்டுகளாகச் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்த ஒரு வீரருக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரமா என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் இந்த முடிவை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2019 முதல் விளையாடி வரும் ரியான் பராக், இதுவரை 94 போட்டிகளில் பங்கேற்று 1773 ரன்கள் எடுத்துள்ளார். இவரது சராசரி 25.70 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 142.07 ஆகும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஆரம்பக்கால கட்டங்களில் இவரது சராசரி வெறும் 11 ஆக மட்டுமே இருந்தது. இவ்வளவு மோசமான புள்ளிவிவரங்களைக் கொண்ட ஒரு வீரரைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி ஏன் தக்கவைத்துக் கொள்கிறது என்பதே மஞ்சுரேக்கரின் முக்கிய கேள்வியாக உள்ளது.

"ஒரு வீரர் ரன் எடுக்கத் திணறினாலும், அவரைத் தொடர்ந்து ஆதரிப்பதும், இப்போது அவருக்கு கேப்டன் பதவியைக் கொடுத்திருப்பதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என மஞ்சுரேக்கர் தெரிவித்துள்ளார். கடந்த 2024 சீசனில் 573 ரன்கள் குவித்து ரியான் பராக் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியதை மஞ்சுரேக்கர் ஒப்புக்கொண்டாலும், அதற்காக அவருக்கு கேப்டன் பதவியைப் பரிசாக வழங்கியது சரியான முடிவு அல்ல என்று கூறி இருக்கிறார்.
குறிப்பாக, பல ஆண்டுகளாக அணியை வழிநடத்தி வந்த சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற்றப்பட்டதும், அவருக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் போன்ற அனுபவ வீரர்கள் அணிக்குள் வந்ததும் குறிப்பிடத்தக்கது. ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் என இத்தனை வீரர்கள் இருக்கும் போது ரியான் பராக்கிற்கு ஏன் முன்னுரிமை அளிக்கப்பட்டது என்பது புரியாத புதிராக உள்ளது.
மேலும், ரியான் பராக்கின் நடவடிக்கைகளையும் மஞ்சுரேக்கர் விமர்சித்துள்ளார். "மைதானத்தில் அவர் காட்டும் அதிகப்படியான தன்னம்பிக்கை சில நேரங்களில் கர்வமாகத் தெரிகிறது. அவர் மற்ற இந்திய வீரர்களைப் போலச் சாதாரணமானவர் அல்ல, ஒரு தனித்துவமான குணம் கொண்டவர். இருப்பினும், கடின உழைப்புக்கு முன்னதாகவே அவருக்குப் பெரிய சன்மானங்கள் (கேப்டன் பதவி) கிடைத்துவிட்டதோ எனத் தோன்றுகிறது" என்று அவர் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சில முக்கிய வீரர்கள் வெளியேறியதற்கு, நிர்வாகம் எடுத்த இதுபோன்ற கேப்டன்சி முடிவுகளே காரணமாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் அவர் கிளப்பியுள்ளார். ஒரு அணியின் உரிமையாளர்கள் எதைக் கண்டு ரியான் பராக்கை ஆதரிக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றாலும், கிரிக்கெட் நுணுக்கங்களின்படி இது ஒரு தவறான முன்னுதாரணம் என்பதே மஞ்சுரேக்கரின் கருத்தாக உள்ளது. வரும் ஐபிஎல் 2026 தொடரில் ரியான் பராக் தனது தலைமையின் கீழ் ராஜஸ்தான் அணியைச் சாம்பியனாக்கி மஞ்சுரேக்கரின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுப்பாரா? என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications