“ரியான் பராக்கிற்கு எப்படி கேப்டன் பதவி? ராஜா போல நடத்தப்படுகிறார்”.. ஸ்ரீகாந்த் கடும் விமர்சனம்!
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இளம் வீரர் ரியான் பராக் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பல்வேறு கேள்விகளை எழுப்பி விமர்சனம் செய்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக, ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அணி மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் டிரேடிங் மூலம் ராஜஸ்தான் அணிக்கு மாறினர். இந்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற அனுபவமிக்க முன்னணி வீரர்கள் அணியில் இருக்கும்போது, 24 வயதான ரியான் பராக் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகி ஒருவர் ரியான் பராக்கிற்கு ஆதரவாக இருப்பதாக ஒரு தகவல் உள்ளது.

இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "அவர் எப்படி கேப்டன் ஆனார் என்பது அனைவருக்கும் தெரியும். அது அந்த அணி நிர்வாகத்தின் முடிவு என்றாலும், அங்கு அவர் ஒரு ராஜாவைப் போல நடத்தப்படுகிறார். கடந்த ஆண்டு ரியான் பராக் சிறப்பாக செயல்படவில்லை. அதற்கு முந்தைய ஆண்டு அவர் மிகச் சிறப்பாக விளையாடினார். அனுபவமிக்க வீரர்கள் இருக்கும்போது அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது" என்று விமர்சித்துள்ளார்.
கடந்த ஆண்டு சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்ட போது, 8 போட்டிகளில் ராஜஸ்தான் அணியை வழிநடத்திய பராக் வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுக் கொடுத்தார். இருப்பினும் அவர் மீது அணி நிர்வாகம் தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ளது. கடந்த சீசனில் 166.52 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 393 ரன்களை அவர் குவித்திருந்தார். குறிப்பாக 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக தொடர்ந்து 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்தார். 2017 முதல் இதுவரை 84 போட்டிகளில் விளையாடி 1566 ரன்களை எடுத்துள்ள பராக்கின் ஆட்டத்தில் நிலைத்தன்மை இல்லை என்பதே முக்கிய பிரச்சனையாக உள்ளது.
2026 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணியின் வாய்ப்புகள் குறித்து பேசிய ஸ்ரீகாந்த், "இது ஒரு சிறப்பான அணி. பலம் வாய்ந்த எதிரணிகளை வீழ்த்தும் திறமை அவர்களிடம் உள்ளது. அதேநேரம் தங்களை தாங்களே அழித்துக்கொள்ளும் அணியாகவும் அவர்கள் உள்ளனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யவன்ஷி ஆகியோரின் தொடக்கமே அந்த அணியின் மிகப்பெரிய பலம். தனி ஆளாக போட்டியை வென்று கொடுக்கும் திறமை அவர்களுக்கு உள்ளது. ராஜஸ்தான் ஒரு நல்ல அணிதான், ஆனால் மிகவும் ஆபத்தான அணி கிடையாது. இது சாம்பியன் பட்டம் வெல்லும் அணியாக எனக்குத் தெரியவில்லை. அவர்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதே 50-50 தான்" என்று அவர் கணித்துள்ளார்.


Click it and Unblock the Notifications