ஐபிஎல் டிரெஸ்ஸிங் ரூமில் கேப்டன் செய்த செயல்.. இந்தியாவில் தடை செய்யப்பட்ட பொருள்.. சிக்கலில் பராக்
நியூ சண்டிகர்: 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரியான் பராக், தற்போது ஒரு மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, வீரர்களின் ஓய்வறையில் அவர் செய்த ஒரு காரியம் நேரடி ஒளிபரப்பில் சிக்கியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அவர் மீது ஐபிஎல் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்குமா, சட்டபடியும் அவர் மீது நடவடிக்கை பாயுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
முல்லன்பூர் மைதானத்தில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதலின் போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பஞ்சாப் அணி நிர்ணயித்த 223 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடிக்கொண்டிருந்தது. ஆட்டத்தின் 16-வது ஓவரின் போது, கேமராக்கள் ராஜஸ்தான் அணியின் டிரெஸ்ஸிங் ரூம் பக்கம் திரும்பின. அப்போது கேப்டன் ரியான் பராக், 'வேப்பிங்' எனப்படும் மின்னணு சிகரெட்டை (E-cigarette) பயன்படுத்துவது போன்ற காட்சிகள் நேரலையில் பதிவாகின. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி விவாதத்தை கிளப்பியுள்ளது.

ஐபிஎல் ஒழுங்குமுறை விதிகளின்படி, வீரர்கள் தங்கும் ஓய்வறையிலோ அல்லது மைதான வளாகத்திலோ புகைபிடிக்க அனுமதி கிடையாது. அதிலும் முக்கியமாக, இந்தியாவில் 2019-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி மின்னணு சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி இது அபராதம் மற்றும் சிறைத்தண்டனைக்கு உரிய குற்றமாகும். ஒரு அணியின் கேப்டனாக இருந்து கொண்டு, பொதுவெளியில் இத்தகைய செயலில் ஈடுபட்டது விளையாட்டு ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சீசனில் ரியான் பராக்கின் செயல்பாடுகள் ஏற்கனவே விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 14.63 சராசரியில் வெறும் 117 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பஞ்சாப் அணியின் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், பராக்கின் இந்த ஒழுங்கீன செயல் பேசுபொருள் ஆகி உள்ளது.
ஏற்கனவே இதே சீசனில் ராஜஸ்தான் அணியின் மேலாளர் ரோமி பிந்தர், மைதானத்தில் செல்போன் பயன்படுத்தியதற்காக அபராதத்திற்கு உள்ளானார். தற்போது கேப்டனே சர்ச்சையில் சிக்கியுள்ளதால், அவருக்குப் போட்டி ஊதியத்தில் இருந்து அபராதம் விதிக்கப்படலாம் அல்லது சில போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்றாலும், விரைவில் விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சொந்த அணியின் கேப்டனே இத்தகைய சர்ச்சையில் சிக்கியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications
