அகமதாபாத்: 2026 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன்சி குறித்து மிகப்பெரிய விவாதமே நடந்தது. சஞ்சு சாம்சன் அணியில் இல்லாத சூழலில், இளம் வீரர் ரியான் பராக்கிற்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டபோது, பலரும் அவருக்கு அந்த தகுதி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர். ஆனால், அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அவர் வகுத்த ஒரு வியூகம், விமர்சகர்களின் வாயை அடைத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 210 ரன்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஆட்டத்தின் கடைசி 2 ஓவர்களில் குஜராத் வெற்றி பெற வெறும் 15 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. களத்தில் ரஷீத் கான் மற்றும் ககிசோ ரபாடா அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்தனர். அந்த இக்கட்டான நேரத்தில் ரியான் பராக் ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார்.

அவரிடம் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே என இரண்டு பந்துவீச்சாளர்கள் இருந்தனர். பொதுவாக அனுபவம் வாய்ந்த ஆர்ச்சரை கடைசி ஓவர் வீசச் சொல்வதே வழக்கம். ஆனால், ரியான் பராக் 19வது ஓவரை ஆர்ச்சரிடம் கொடுத்தார். ஆர்ச்சர் அந்த ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து குஜராத் வீரர்களைக் கட்டுப்படுத்தினார். இதனால் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற அழுத்தம் குஜராத் பக்கம் திரும்பியது. இறுதி ஓவரை வீசிய துஷார் தேஷ்பாண்டே வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து ரஷீத் கான் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம் ராஜஸ்தான் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ரியான் பராக்கின் இந்த வியூகத்தை முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் முன்னாள் வீரர் இர்பான் பதான் ஆகியோர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். ரவி சாஸ்திரி கூறுகையில், "ஐபிஎல் வரலாற்றிலேயே இது ஒரு மிகச்சிறந்த போட்டி. ரியான் பராக்கிற்கு கேப்டனாக சிறந்த எதிர்காலம் உள்ளது. அவரது நிதானமும் முதிர்ச்சியும் அபாரமானது" என்றார். இர்பான் பதான் கூறுகையில், "யாரை 19வது ஓவர் வீசச் செய்வது என்பதில் பராக் எடுத்த முடிவு ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது" எனப் புகழ்ந்தார்.

கடந்த 2019 முதல் ராஜஸ்தான் அணியுடன் பயணிக்கும் ரியான் பராக், 80-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி 1500 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார். குறிப்பாக 2024 சீசனில் 573 ரன்கள் குவித்து தனது திறமையை நிரூபித்தார். இப்போது கேப்டனாகவும் களமிறங்கி, விமர்சனங்களைச் சாதனைகளாக மாற்றி வருகிறார். கேப்டன்சிக்கு தகுதியற்றவர் என்றும், செல்வாக்கின் காரணமாக கேப்டன்சியை பெற்றவர் என்றும் சொல்லப்பட்ட அதே ரியான் பராக், இன்று தனது தலைமைப் பண்பால் ராஜஸ்தான் அணிக்கு தோல்வியடைய வேண்டிய போட்டியில் வெற்றி தேடித் தந்துள்ளார்.