IPL 2026: ஆர்சிபி வெற்றி தான் என் வாழ்க்கையின் திறந்த தருணம்.. தினேஷ் கார்த்திக் கருத்து
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2025 ஆம் ஆண்டில் தங்கள் முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை, அணியின் பேட்டிங் பயிற்சியாளரும் வழிகாட்டியுமான தினேஷ் கார்த்திக், தனது நீண்டநாள் கிரிக்கெட் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாக தெரிவித்துள்ளார். அவர், வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 2013-ல் வென்ற ஐபிஎல் பட்டத்தை விட இந்த ஆர்சிபி வெற்றியே சிறந்தது என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி, ராஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த கோப்பையை வசப்படுத்தியது.

இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ஒப்பிடுகையில், ஆர்சிபி வெற்றியும் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிக உயர்ந்த தருணங்களில் ஒன்று என தினேஷ் கார்த்திக் பெருமிதத்துடன் தெரிவித்தார். இது குறித்து ஆர்சிபி போட்காஸ்டில் பேசிய அவர், "சமீபத்தில் என் கிரிக்கெட் வாழ்க்கையின் சிறப்பம்சம் எதுவென்று யாரோ என்னிடம் கேட்டார்கள். நான் அங்கம் வகித்த உலகக் கோப்பை வெற்றி நிச்சயம் அதில் ஒன்று. அத்துடன், ஆர்சிபி-யின் இந்த சாதனையான வெற்றியும் அதே உயரத்தில் இருக்கிறது" என்று கூறினார்.
"ஆர்சிபி வெற்றி அதை மிஞ்சி நிற்கிறது. ஏனெனில், நாங்கள் 18 ஆண்டுகள் இந்த தருணத்திற்காக பெரும் ஆவலுடன் காத்திருந்தோம். இது ஒரு நீண்டகால எதிர்பார்ப்பு. ரசிகர்களின் உணர்வுபூர்வமான ஆதரவு குறித்து நாம் அனைவரும் அறிவோம். ஒரு கோப்பையை வெல்லும்போது, ரசிகர்களுக்கு மீண்டும் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் இயல்பாகவே உண்டாகும்" என கார்த்திக் விளக்கினார்.
"இந்த முதல் கோப்பை ரசிகர்களுக்கானது. அவர்கள் நல்ல நேரத்திலும், கடினமான நேரத்திலும் எங்களுடன் உறுதுணையாக நின்றனர். 'நாம் கோப்பையை வென்றால், அது ரசிகர்களுக்காகத்தான்' என்று உடைமாற்றும் அறையிலும் கூறப்பட்டது. அது உண்மையிலேயே ஒரு சிறப்பு உணர்வு" என்றார் அவர்.
2025 ஐபிஎல் தொடரின் பிற்பகுதி 'ஆபரேஷன் சிந்துர்' காரணமாக சிறிதுகாலம் நிறுத்தி வைக்கப்பட்டது. இத்தகைய திடீர் தடங்கலுக்குப் பிறகும் அணி வெற்றிக்கான வேகத்தைத் தக்கவைத்துக்கொண்ட விதத்தை தினேஷ் கார்த்திக் எடுத்துரைத்தார்.
"கடந்த ஆண்டு நாங்கள் பல சவால்களை எதிர்கொண்டோம். தொடரின் பிற்பகுதியில் ஏற்பட்ட சில சூழ்நிலைகளால், நாங்கள் மீண்டும் மதிப்பீடு செய்து, குழுவாக செயல்பட வேண்டியிருந்தது. ஒரு அணிக்கு உத்வேகம் இருக்கும்போது, திடீர் தடை ஏற்பட்டு மீண்டும் தொடங்குவது கடினம். ஆயினும், அந்த இடைவெளிக்குப் பிறகு சில போட்டிகளில் வென்று உறுதியான கிரிக்கெட்டை விளையாடிய விதம் மற்றும் அனைத்து அணிகளின் தரமான ஆட்டம் ஆகியவை ஐபிஎல்-லின் நிகரற்ற நிலையை எடுத்துக்காட்டுகிறது" என்று அவர் கூறினார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆர்சிபி வெற்றியின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று, விராட் கோலி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தியது. அவர் தனது முன்னாள் சக வீரர்களான ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
"இதுபோல ஒரு தொடரில் வெல்வது எளிதல்ல. அது பரவசமான, அசாதாரணமான உணர்வைத் தந்தது. அந்த தருணத்தின் ஒரு பகுதியாக இருந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். விராட் கோலி கண்ணீர் சிந்துவதைக் காண்பது, ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெயில் எங்களுடன் இருந்ததுடன், ஆண்டி ஃப்ளவர் மற்றும் மோ போபாட் போன்றவர்கள் இந்த அணியை உருவாக்கி, ஒரு சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியது மிகச் சிறப்பு" என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.


Click it and Unblock the Notifications