பெங்களூரு: 2025 ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று, 18 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்கு ஆர்சிபி அணி முடிவுகட்டியது. இந்த வரலாற்று வெற்றியை, அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி அண்மையில் மனம் திறந்து நினைவு கூர்ந்தார். இந்த உணர்வுபூர்வமான பயணத்தை, நீண்டகால ஊழியரான ரமேஷ் மானே மற்றும் அணியினருடன் அவர் பகிர்ந்து கொண்டார்.
சர்வதேச அனுபவம் இல்லாத இளம் உள்நாட்டு வீரராக RCB-யில் இணைந்த கோலி, லீக் மற்றும் அணியின் முக்கியமான அடையாளமாக மாறினார். 2013-ல் கேப்டனான அவர், சிறந்த வீரர்களைக் கொண்டிருந்தும், கோப்பையை வெல்லும் வாய்ப்பு பலமுறை கைநழுவிப் போனது.

இது குறித்து பேசிய அவர், "RCB-யில் எங்களுக்கெல்லாம் அது ஒரு மிக முக்கியமான இரவு. முதல் நாளிலிருந்து நானும் ரமேஷ் மானேவும் இங்கு இருக்கிறோம். நாங்கள் இருவரும் RCB குழுவில் உள்ள மிக மூத்த உறுப்பினர்கள்," என்று கோலி கூறினார். இறுதிப்போட்டியை அடைந்தபோது, தனக்குள் அமைதியான நம்பிக்கை இருந்ததாகவும், ஆனால் வெற்றி எளிதல்ல என்பதையும் உணர்ந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

2026 சீசனுக்கு முன், RCB ஒன்பது முறை பிளேஆஃப்களுக்குத் தகுதி பெற்று, மூன்று முறை இறுதிப் போட்டிக்குச் சென்றும், கோப்பையை வென்றதில்லை. கடந்தகாலத் தோல்விகள் கோலிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தின. "கோப்பையை வெல்ல முடியாமல் போன கடந்த கால சம்பவங்கள், பதட்டப்படாமல் விளையாட கூடுதல் உந்துதலை அளித்தன," என்றார் கோஹ்லி.
மேலும், "இந்த லீக் இப்போது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தது. இறுதிப் போட்டிக்கு வர நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளோம். இது தற்செயலானது அல்ல, அதிர்ஷ்டமும் இல்லை. பல சிறந்த அணிகளைத் தோற்கடித்துள்ளோம். நாங்கள் ஒரு அற்புதமான அணி. இந்த நாளன்று இங்கே நிற்க எங்களுக்குத் தகுதி உண்டு," என்றும் அவர் உறுதிப்படக் கூறினார்.
"அது எங்களுக்கெல்லாம் ஒரு அற்புதமான இரவு. உண்மையிலேயே எனக்கு நம்ப முடியாததாகவும், கனவு போலவும் இருந்தது. அப்போது பல விஷயங்கள் என் கண்முன் வந்து சென்றன . 18 ஆண்டுகாலப் பயணம், ஏற்ற தாழ்வுகள், நல்ல மற்றும் மோசமான தருணங்கள் அனைத்தும். அடுத்த பத்து நிமிடங்களில் இவை அனைத்தும் ஒரு சேர நிகழ்வது போலிருந்தது. இதை விளக்குவது கடினம். இது அனுபவித்து உணர வேண்டிய ஒன்று. அந்த அனுபவத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்."

"வெற்றி உறுதியானது என்று அறிந்த கடைசி ஓவரில், ஜோஷ் ஹேசல்வுட் நோ பால் வீசக்கூடாது என நம்பினோம். அவர் எப்போதும் நோ பால் வீசுவதில்லை. ஒருவித நம்பிக்கை இருந்தது. நான் சொன்னது போல், சரியான முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆட்டம் எதிரணியின் கையை விட்டுப் போனது எனத் தெரிந்த பிறகும், அந்த கடைசி மூன்று பந்துகளுக்காகக் காத்திருந்ததுதான் அந்த இரவின் மிகக் கடினமான பகுதி," என்று கோலி விளக்கினார்.