ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2026 சீசனில் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக கேப்டனாக களமிறங்குவது சாத்தியமற்ற பணி என ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார். விராட் கோலிக்கு இணையான அளவில் தனித்துவமான திறமைகள் கொண்ட சாம்சன்,டிரேடிங் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கைமாறப்பட்டார். அவருக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆர்ஆர் அணிக்கு வந்தனர்.
சாம்சன் சமீபத்தில் 2026 டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்றார். இந்தியாவின் வெற்றிக்கு உதவிய அவர், கடைசி மூன்று போட்டிகளிலும் தலா 80 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தினார். ஆர்ஆர் அணி 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தைத் தவிர, சாம்சன் தனது முழு ஐபிஎல் வாழ்வையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவே செலவிட்டார்.

ஐபிஎல் வரலாற்றில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்களில் சாம்சன் முதலிடத்தில் உள்ளார். அவர் 155 போட்டிகளில் 4,219 ரன்கள் குவித்துள்ளார். இது இரண்டாவது இடத்தில் உள்ள அஜிங்க்யா ரஹானேவை விட 1,000 ரன்களுக்கும் அதிகம்.

ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, சாம்சனின் விலகல் குறித்து பேசிய ரியான் பராக், "சஞ்சுவின் ஆட்டம் தனித்துவமானது. அவரை வேறு யாருடனும் ஒப்பிட முடியாது. இது 'விராட் கோலிக்கு மாற்று யார்?’ என்று கேட்பது போன்றது. அது சாத்தியமே இல்லை. ஆனாலும், ஒவ்வொரு வீரரும் வெற்றி பெறவே விளையாடுகிறார்கள், அனைவருக்கும் வெவ்வேறு திறன்கள் உள்ளன."
நெருக்கமான போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் சந்தித்த பின்னடைவுகளைச் சரிசெய்வதே ஐபிஎல் 2026-ல் தங்களுக்குப் பெரிய சவாலாக இருக்கும் என ரியான் பராக் கருதுகிறார். கடந்த சீசனில் 14 போட்டிகளில் நான்கு வெற்றிகளுடன் கடைசிக்கு முந்தைய இடத்தில் முடித்த ஆர்ஆர், வெற்றி வாய்ப்புள்ள பல போட்டிகளில் தோல்விகளைச் சந்தித்தது.
இது குறித்து பேசிய ரியான் பராக், “கடைசி கட்டங்களில் நாங்கள் போட்டிகளை இழந்தோம். இன்னும் சுதந்திரமாக விளையாடியிருந்தாலோ, முக்கியமான தருணத்தில் ஒரு பவுண்டரியை அடித்திருந்தாலோ எதிரணியை அவ்வாறு செய்யவிடாமல் தடுத்திருந்தாலோ நாங்கள் மேலும் முன்னேறியிருப்போம். இந்த முறை, அந்த தவறுகளை நாங்கள் கண்டறிந்து சரிசெய்து வருகிறோம்,” என்றார்.
“எங்களிடம் சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களின் சிறந்த கலவை உள்ளது. பேட்டிங்கிலும், வலது கை மற்றும் இடது கை பேட்ஸ்மேன்களின் சரியான கலவை உள்ளது. ரவீந்திர ஜடேஜா மீது எங்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. அவர் ஒரு அற்புதமான ஆல்ரவுண்டர்,” என பராக் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு வழக்கமான கேப்டன் சாம்சன் அணிக்குள் இருந்தும் வெளியேயும் இருந்ததால், ஆர்ஆர் அணியின் 14 போட்டிகளில் எட்டில் பராக் தலைமை தாங்கினார். ஆனால், 2008 சாம்பியன்களான அவர்கள் பராக் தலைமையில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்றனர். இது ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் ஏமாற்றமளிக்கும் முடிவுக்கு வழிவகுத்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐபிஎல் 2026-ல் ரியான் பராக் நிரந்தர கேப்டனாக பொறுப்பேற்க, ஒரு புத்துணர்ச்சியுடன் மீண்டும் தொடங்கும் என நம்புகிறது. அவர்கள் மார்ச் 30 அன்று குவஹாத்தியில் சிஎஸ்கே அணியுடன் தங்கள் தொடக்கப் போட்டியில் மோதுகிறார்கள்.