சென்னை: 2026 ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கப் போவது யார் என்பது குறித்த முக்கிய தகவலை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஐபிஎல் கேப்டன்களுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ருதுராஜ் கெய்க்வாட், இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக, கடந்த சீசனில் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்த இளம் வீரர் ஆயுஷ் மத்ரே இந்த ஆண்டு ஓப்பனிங்கில் களமிறங்க மாட்டார் என அவர் தெளிவுபடுத்தினார். அவருக்குப் பதிலாக, சிஎஸ்கே அணியில் புதிதாக இணைந்துள்ள சஞ்சு சாம்சனுடன் இணைந்து தான் தொடக்க வீரராக களமிறங்க உள்ளதாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவித்துள்ளார்.

கடந்த 2025 ஐபிஎல் சீசனில் சென்னை அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் அணியின் பேட்டிங் வரிசையில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக ஆயுஷ் மத்ரே மற்றும் டெவால்ட் ப்ரீவிஸ் போன்ற இளம் திறமையாளர்கள் அணிக்குள் கொண்டுவரப்பட்டனர். இந்த சீசனில் ப்ரீவிஸ் 4 அல்லது 5 வது இடத்தில் களமிறங்குவார் என்றும், சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக வருவதால் ஆயுஷ் மத்ரே 3 வது இடத்திற்கு மாற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே அணியின் இந்த புதிய ஓப்பனிங் ஜோடிக்கு முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், "ருதுராஜ் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவருமே தரமான ஆட்டக்காரர்கள். நீண்ட காலம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறன் கொண்டவர்கள். இவர்கள் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடி காட்டுவதை பார்க்க நான் ஆவலுடன் இருக்கிறேன். ஒரு வீரர் பந்தை மிகவும் நேர்த்தியாக கையாளக்கூடியவர், மற்றொருவர் பந்தை கடுமையாக தாக்கி விளையாடக் கூடியவர். இரு சிறந்த தொடக்க வீரர்கள் சிஎஸ்கே அணிக்கு கிடைத்துள்ளனர்" என்று பாராட்டியுள்ளார்.

5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2026 ஐபிஎல் தொடரில் தனது முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி வரும் மார்ச் 30 ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு கோலாகலமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
