IPL 2026: 2026 ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் போகாத காரணமே இதுதான்.. ருதுராஜ் உருக்கம்
அகமதாபாத்: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 89 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்புத் தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. 230 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே அணி, 13.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தத் தோல்வி குறித்துப் பேசிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், அணியின் சறுக்கல்களுக்கான காரணங்களை வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்.
காயங்கள் கொடுத்த அடி
இந்தப் போட்டிக்குப் பின் பேசிய ருதுராஜ், "இந்த சீசன் எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது. தொடக்கத்தில் அடுத்தடுத்து 3 போட்டிகளில் தோற்றாலும், பின்னர் சிறப்பாக மீண்டு வந்து வெற்றிகளைப் பெற்றோம். ஆனால், முக்கியமான கட்டத்தில் வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் எங்களைப் பலவீனப்படுத்திவிட்டன. குறிப்பாக கோஷ் மற்றும் ஓவர்டன் போன்ற வீரர்கள் பாதியில் விலகியது அணியின் சமநிலையை நிலைகுலையச் செய்தது. கடந்த 3 போட்டிகளில் ஒரு தரமான பேட்ஸ்மேன் அல்லது பந்துவீச்சாளர் இல்லாமல் விளையாடும் சூழலுக்குத் தள்ளப்பட்டோம்" என்றார்.

அனுபவமில்லாத இளம் அணி
சிஎஸ்கே ஒரு மாற்றத்தை நோக்கிச் செல்லும் அணி என்பதைப் பலர் புரிந்துகொள்வதில்லை என்று குறிப்பிட்ட ருதுராஜ், "எங்கள் அணியில் 8 முதல் 10 வீரர்கள் 20 போட்டிகளுக்கும் குறைவாக விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள். ரஹானே, அம்பத்தி ராயுடு போன்ற அனுபவ வீரர்களுக்குப் பிறகு இளம் வீரர்களைக் கொண்டு அணியைக் கட்டமைப்பது எளிதல்ல. கார்த்திக் சர்மா, உர்வில் படேல் போன்றோருக்கு இது ஒரு பாடமாக இருக்கும். இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியிலும் வெளியூர் மைதானங்களில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றது எங்களுக்குப் பெருமை அளிக்கிறது" எனத் தெரிவித்தார்.
தோனி குறித்து பதில்
ரசிகர்களின் நீண்ட காலக் கேள்வியான தோனியின் ஓய்வு குறித்துப் பேசிய அவர், "தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா என்பதை அடுத்த ஆண்டு தான் நாம் தெரிந்துகொள்ள முடியும். இக்கட்டான நேரங்களில் அவர் களத்தில் இருப்பது அணிக்கு மிகப்பெரிய பலம். கடைசி ஓவர்களில் அவர் வந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றுவார். அவர் இல்லாதது எங்களுக்குப் பெரிய இழப்பு தான். இருப்பினும், தற்போதுள்ள இளம் வீரர்களின் செயல்பாட்டில் நான் திருப்தி அடைகிறேன்" என்றார்.
இந்தத் தோல்வியின் மூலம் நடப்புச் சாம்பியனான சிஎஸ்கே அணி 2026 ஐபிஎல் தொடரின் பிளே-ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறியிருப்பது ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து 2024, 2025 மற்றும் 2026 ஆகிய மூன்று ஐபிஎல் தொடர்களில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
