சென்னை: 2026 ஐபிஎல் தொடருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி தயாராகி வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப், அணியின் கேப்டன்சி குறித்து ஒரு சர்ச்சை கருத்தை முன்வைத்துள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் அதிகாரப்பூர்வமாக கேப்டனாகத் தக்கவைக்கப்பட்டிருந்தாலும், களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தோனியின் ஆதிக்கமே நீடிக்கிறது என்றும், ருதுராஜ் வெறும் 'காகித' கேப்டன்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
2025 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி சந்தித்த சவால்கள், காயம் காரணமாக ருதுராஜ் பாதியிலேயே விலகியது, ராஜஸ்தான் ராயல்ஸிலிருந்து சஞ்சு சாம்சன் அணிக்கு வந்தது எனப் பல மாற்றங்களுக்கு மத்தியில், தோனியின் உண்மையான பங்கு என்ன என்பது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தனது யூடியூப் சேனலில் பேசிய முகமது கைஃப், தோனியின் பங்கு ஒரு வெறும் 'இம்பேக்ட்' வீரர் என்பதை விட மிக அதிகம் என்று வலியுறுத்தியுள்ளார். "தோனி இப்போது பேட்டிங் செய்வதற்காக விளையாடுவதில்லை. அவர் 20 ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்வதற்கும், 20 ஓவர்கள் கேப்டன்சி செய்வதற்கும் தான் விளையாடுகிறார். வீரர்களை வழிநடத்துவதற்காகவே அவர் இருக்கிறார். ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வழிகாட்டியாக இருக்கிறார். ஒரு வழிகாட்டியாகவும், கேப்டனாகவும் இருப்பதற்காக மட்டுமே அவர் விளையாடுகிறார்" என்று கைஃப் குறிப்பிட்டார்.
மேலும், "காகிதத்தில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருக்கலாம், ஆனால் தோனி களத்தில் இருக்கும் வரை, அனைத்தும் அவர் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அவர் என்ன செய்கிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனவே, அவர் ஒரு 'இம்பேக்ட்' வீரராக விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை. ஒன்று, அவர் முழுமையாக விளையாடுவார் அல்லது விளையாட்டிலிருந்து தன்னை விலக்கிக் கொள்வார், ஆனால் 'இம்பேக்ட்' வீரராக இருக்க வாய்ப்பே இல்லை" என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார் கைஃப்.
2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கொடுத்து, பதிலாக அந்த அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வாங்கியது. சாம்சன் போன்ற ஒரு அனுபவமிக்க ஐபிஎல் கேப்டன் சிஎஸ்கே அணிக்கு வந்த போதிலும், ருதுராஜ் கெய்க்வாட்டையே கேப்டனாகத் தக்கவைத்தது அணி நிர்வாகம். தோனியே சிஎஸ்கே-வை வழிநடத்த வேண்டும் என்பதே இதற்கும் காரணமாக இருக்கும் என்பதே கைஃப் சொல்லும் கருத்தாக உள்ளது.
2025 ஐபிஎல் சீசனில் தோனியின் பேட்டிங் அணுகுமுறையும், கைஃப்பின் கருத்துக்கு வலுசேர்க்கிறது. 44 வயதான தோனி, பல போட்டிகளில் கடைசி சில ஓவர்களில் மட்டுமே களமிறங்கினார். சில சமயங்களில் 9-ம் நிலை வீரராகக் கூட பேட்டிங் செய்ய வந்தார். பேட்டிங்கில் அவர் காட்டிய இந்த பாதுகாப்பான அணுகுமுறை, அவரது முக்கியப் பணி தலைமைப் பொறுப்பும், விக்கெட் கீப்பிங்கும்தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.
2025 ஐபிஎல் சீசனில், ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாகப் பாதியிலேயே விலகியபோது, தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார். ஆனால், அந்த சீசனில் அணியால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. வரலாற்றிலேயே முதல் முறையாகப் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து, ஒரு மறக்கமுடியாத மோசமான தொடராக அது அமைந்தது.