சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும், எந்த வீரர் அதிக ரன்கள் குவிப்பார் என்ற விவாதங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாப் பேட்ஸ்மேன் யார் என்பது குறித்து முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற மினி ஏலத்திற்கு முன்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னை அணியில் இணைந்தது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சஞ்சு சாம்சன் தான் இந்த முறை சிஎஸ்கே-வின் டாப் ஸ்கோரராக இருப்பார் என்று பலரும் கருதிய நிலையில், அஸ்வின் ஒரு புதிய தகவலைக் கூறியுள்ளார். சஞ்சு சாம்சனை விட கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தான் இந்த சீசனில் அதிக ரன்கள் குவிப்பார் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அஸ்வின், "இந்த சீசனில் சிஎஸ்கே-வின் சிறந்த பேட்ஸ்மேனாக ருதுராஜ் கெய்க்வாட் இருப்பார். அவர் 3-வது வரிசையில் களமிறங்குவார் என்று நான் நினைக்கிறேன். மற்ற பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடும்போது, இன்னிங்ஸை நிதானமாக எடுத்துச் செல்லும் பொறுப்பு அவருக்கு இருக்கும். அவர் ஒரு நங்கூரம் போல நின்று விளையாடுவார். இதனாலேயே அவர் அதிக ரன்கள் குவித்து முதலிடம் பிடிப்பார்" என்று கூறியுள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் தற்போது உச்சக்கட்ட ஃபார்மில் உள்ளார். 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் 300-க்கும் அதிகமான ரன்களைக் குவித்து 'தொடர் நாயகன்' விருதினை அவர் வென்றார். அதேபோல் விஜய் ஹசாரே தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 2 சதங்களுடன் 413 ரன்களைக் குவித்துள்ளார். அவரது சராசரி 82.60 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனில் காயம் காரணமாக 5 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ருதுராஜ், இந்த முறை மீண்டும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தக் காத்திருக்கிறார்.
சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு காகித அளவில் பலவீனமாகத் தெரிந்தாலும், அவர்கள் எப்போதும் ஒரு சிறந்த பந்துவீச்சாளரைக் கண்டறிந்துவிடுவார்கள் என்று அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற வேண்டுமானால், முதல் 3 வீரர்களில் குறைந்தது இரண்டு பேர் தலா 500 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

மற்ற அணிகளுக்குப் பின்னடைவாக இருக்கும் வெளிநாட்டு வீரர்களின் வருகை, சென்னை அணிக்குச் சாதகமாக அமையும் என்றார் அஸ்வின். பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் போன்ற முன்னணி பந்துவீச்சாளர்கள் ஆரம்பக்கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார்கள். அந்தச் சமயத்தில் சென்னை அணி சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுவிட்டால், ஆர்சிபி மற்றும் ஹைதராபாத் போன்ற அணிகளை விட அவர்கள் புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற முடியும் என்றும் அஸ்வின் கூறியுள்ளார். கடந்த முறை ஏமாற்றம் அளித்த சென்னை அணி, இந்த முறை ருதுராஜ் தலைமையில் மீண்டும் சாதிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.