IPL 2026: ரிஷப் பண்ட்டை திட்டிய கோயங்கா.. லக்னோ அணியின் தோல்வியால் ஆவேசம்.. முதல் மேட்சிலேயே ஆரம்பம்
லக்னோ: 2026 ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. லக்னோ நிர்ணயித்த 142 ரன்கள் என்ற இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு, சமீர் ரிஸ்வி 70 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். இந்த தோல்விக்கு பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மிகுந்த ஆவேசத்துடன் காணப்பட்டார்.
அவர் மைதானத்திலேயே தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், டாம் மூடி மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோருடன் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டார். தோல்வியால் அதிருப்தி அடைந்த கோயங்கா, கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களை நோக்கி ஏதோ கோபமாக பேசுவது கேமராவில் பதிவாகியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிட்செல் மார்ஷ் 35 ரன்களும், அப்துல் சமத் 36 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். டெல்லி தரப்பில் லுங்கி என்கிடி மற்றும் நடராஜன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 142 ரன்களை துரத்திய டெல்லி அணி, ஒரு கட்டத்தில் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் சமீர் ரிஸ்வி மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பெற செய்தது.
சஞ்சீவ் கோயங்கா இவ்வாறு பொதுவெளியில் வீரர்களை விமர்சிப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2024 சீசனில், ஹைதராபாத் அணியிடம் அடைந்த படுதோல்விக்கு பிறகு, அப்போதைய கேப்டன் கே.எல். ராகுலை அவர் மைதானத்திலேயே கடுமையாக சாடினார். அந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், இறுதியில் ராகுல் அணியை விட்டு வெளியேறவும் காரணமாக அமைந்தது.
அதேபோல் 2025 சீசனிலும் ரிஷப் பண்ட் அவுட் ஆனபோது கோயங்கா தனது அதிருப்தியை மைதானத்தின் பால்கனியில் இருந்து வெளிப்படுத்தினார். மேலும், இரண்டு முறை ரிஷப் பண்ட் உடன் போட்டி முடிந்த உடன் விவாதம் செய்த வீடியோக்களும் வெளியானது. தற்போது மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கோயங்காவின் இந்த அணுகுமுறை கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வல்லுநர்களிடையே கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications