சென்னை: ஐபிஎல் 2026 சீசனுக்கான ஏற்பாடுகள் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சனை தங்கள் அணிக்கு வர்த்தகம் மூலம் அணி மாற்றம் செய்து கொண்டது. இதற்காக அணியின் முக்கிய வீரராக இருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகிய இருவரையும் சிஎஸ்கே விட்டுக்கொடுத்துள்ளது.
இந்த வர்த்தகம் குறித்துப் பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், இந்திய வீரர் ஹனுமா விஹாரி அதிர்ச்சியான காரணம் ஒன்றை கூறி உள்ளார்.
ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியின் முகமாக இருந்தவர். அவருடன் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரனையும் கொடுத்துவிட்டு, சஞ்சு சாம்சனை வாங்கியது ஏன் என்ற கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. இது குறித்துப் பேசிய ஹனுமா விஹாரி, "இது வெறும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட முடிவு மட்டுமல்ல; இது ஒரு வியாபார உத்தி" என்று அதிரடியாகக் கூறியுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்துப் பேசிய விஹாரி, "ஐபிஎல் என்பது வெறும் கிரிக்கெட் விளையாட்டு என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. அணி உரிமையாளர்கள் கிரிக்கெட்டைத் தாண்டி சிந்திக்கிறார்கள். ஒரு வீரரால் அணிக்கு எவ்வளவு வர்த்தக மதிப்பு கிடைக்கும் என்பது மிக முக்கியம். சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வாங்கியதற்கு முக்கியக் காரணம் அவருடைய முக மதிப்பு தான்" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், "சஞ்சு சாம்சனுக்குத் தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. குறிப்பாக கேரள ரசிகர்கள் அவர் எங்கு விளையாடினாலும் மைதானத்திற்கு வந்து ஆரவாரம் செய்கிறார்கள். இந்த ரசிகர் ஆதரவை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவே சிஎஸ்கே முடிவு செய்துள்ளது" என்று விஹாரி விளக்கம் அளித்துள்ளார்.
"உண்மையைச் சொல்லப்போனால் சிஎஸ்கே அணிக்கு அடுத்த சீசனுக்கு ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன் தேவையில்லை. ஏற்கனவே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இருக்கிறார். சஞ்சு சாம்சன் கடந்த சீசனில் காயத்திற்குப் பிறகு ராஜஸ்தானுக்காக 3-வது இடத்தில் தான் களமிறங்கினார். எனவே, அணியின் தேவைக்காக அவரை எடுக்கவில்லை. முழுக்க முழுக்க அவரை அணியின் அடுத்த முகமாக மாற்றவே இந்தத் துணிச்சலான முடிவை எடுத்துள்ளனர்" என்று ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற அணிகளும் சஞ்சு சாம்சனை வாங்கப் போட்டி போட்ட நிலையில், சிஎஸ்கே முந்திக்கொண்டு இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.