மும்பை: ஐபிஎல் 2026 தொடருக்கான அட்டவணை வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் மார்ச் 26ஆம் தேதி தொடர் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே இறுதி அட்டவணை வெளியிடப்படும் என ஐபிஎல் நிர்வாகக் கவுன்சில் முடிவெடுத்துள்ளது. மே 31ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக நடைபெற்ற ஐபிஎல் நிர்வாகக் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், கேரளா ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. தேர்தல் ஆணையம் இதற்கான வாக்குப்பதிவு தேதிகளை அறிவித்த பிறகுதான் ஐபிஎல் அட்டவணை முழுமையாகத் தயாராகும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த சீசன் போட்டிகளை நடத்த பிசிசிஐ 18 மைதானங்களை தேர்வு செய்துள்ளது. மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் போன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் முக்கிய நகரங்களும் இதில் அடங்கும். ஆனால், தேர்தல் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாததால், எந்தெந்த மைதானங்களுக்கு ஒப்புதல் கிடைக்கும் என்பதில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
இந்த 18 மைதானங்களில் டெல்லி, லக்னோ, தர்மசாலா, புதிய சண்டிகர், சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், அகமதாபாத், திருவனந்தபுரம், நவி மும்பை, விசாகப்பட்டினம், கவுகாத்தி, ஜெய்ப்பூர், பெங்களூரு, புனே, ராஞ்சி, ராய்ப்பூர் ஆகியவை அடங்கும்.
பெங்களூரு மற்றும் ஜெய்ப்பூர் மைதானங்களின் தற்போதைய நிலை குறித்து ஐபிஎல் நிர்வாகக் கவுன்சில் கவலை தெரிவித்துள்ளது. ஜனவரி 27ஆம் தேதிக்குள் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) ஆகிய அணிகள் தங்கள் சொந்த மண்ணில் போட்டிகளை நடத்த முடியுமா என்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த ஆண்டு நடந்த பெரும் கூட்ட நெரிசல் காரணமாக அங்கு போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதனால், நவி மும்பையின் டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியம் மற்றும் ராய்ப்பூர் போன்ற இடங்களை சொந்த போட்டிகளுக்குப் பயன்படுத்துவது குறித்து ஆலோசனையும் நடைபெற்று வருகிறது. கூட்ட நிர்வாகத்தை மேம்படுத்த மைதானத்தைச் சுற்றி 300-350 ஏஐ கேமராக்களை நிறுவ கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திடம் ஆர்சிபி அணி பரிந்துரைத்துள்ளது.
அதற்கான செலவுகளையும் தனியே ஏற்க முன்வந்துள்ளது.இதனால் பெங்களூருவில் ஒரு சில போடடிகள் நடைபெறும். மறுபுறம், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்குள் (RCA) நிலவும் உள்விவகாரங்கள் காரணமாக ஐபிஎல் போட்டிகள் அங்கு நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது இதனால், வரவிருக்கும் சீசனில் ஜெய்ப்பூர் ஒரு முக்கிய மைதானமாக இருக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.