கொல்கத்தா: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசன் மார்ச் மாதம் தான் தொடங்க உள்ளது. ஆனால் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தீவிரம் அடைந்து இருப்பதால், கிரிக்கெட் வட்டாரம் களை கட்டி இருக்கிறது. ஒவ்வொரு அணியும் சீசன் தொடங்குவதற்கு முன்பு பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பை கைப்பற்றிய, கொல்கத்தா அணி மூன்று முறை சாம்பியன் ஆனது. இதன் மூலம் மும்பை அணி, சிஎஸ்கே விற்கு பிறகு அதிக கோப்பையை வென்ற அணி என்ற பெருமை அந்த அணிக்கு உள்ளது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் அணியை விட்டு சென்று விட்டதால் கொல்கத்தா அணி கடந்த சீசனில் கடுமையாக தடுமாறியது.

14 போட்டியில் விளையாடிய கொல்கத்தா, வெறும் ஐந்து போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் அந்த அணி எட்டாவது இடத்தை பிடித்தது. இதனால் கொல்கத்தா அணி தற்போது அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. அணியின் பயிற்சியாளராக இருந்த சந்திரகாந்த் பண்டிட் அதிரடியாக நீக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரும் ஐபிஎல் தொடரில் பல சாதனைகளை படைத்துள்ள ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆல்ரவுண்டர் வாட்சன் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஐபிஎல் தொடரில் மூன்று முறை கோப்பையை வென்ற வாட்சன் சிஎஸ்கே அணியின் 2018 மற்றும் 21 ஆம் ஆண்டு சீசனில் அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
அது மட்டுமில்லாமல் தொடரின் மிக மதிப்புமிக்க வீரர் என்ற எம்விபி விருதை இரண்டு முறை அவர் கைப்பற்றி இருக்கிறார். 2008 மற்றும் 2013 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய போது இந்த சாதனையை அவர் படைத்திருக்கிறார். மொத்தமாக ஐபிஎல் தொடரில் 145 போட்டிகளில் விளையாடிய வாட்சன் 3874 ரன்களையும் 92 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.
இதில் 4 சதம் மற்றும் 21 அரை சதம் அடங்கும். வாட்சனின் வருகை மூலம் கொல்கத்தா அணியில் புத்துணர்ச்சி கிடைத்திருக்கிறது. ஏற்கனவே சி எஸ் கே சேர்ந்த பிராவோ, கொல்கத்தா அணியில் உள்ள நிலையில் தற்போது வாட்சனும் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.