மும்பை: ஐபிஎல் 2026 தொடரில் சிஎஸ்கே அணிக்கு ஷிவம் தூபே நடு ஓவர்களில் முக்கியமான ரன்களைக் குவிப்பார் என எதிர்பார்ப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளார். தூபே இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் அளித்த பங்களிப்பைப் போலவே சிஎஸ்கேவுக்காகவும் செயல்பட வேண்டுமென்று அணி நிர்வாகம் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணி தக்கவைத்த ஐந்து வீரர்களில் ஷிவம் தூபேயும் ஒருவர். ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி அவரை தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், ஐபிஎல் 2026 தொடரில் சிஎஸ்கேவுக்கான தூபேவின் பங்கு குறித்து பியூஷ் சாவ்லாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளிம்ம அவர், "இப்போது அவருக்கு அந்த நம்பிக்கை உள்ளது. அவர் களமிறங்கும் போது, ஓரிரு ஓவர்களாக அதை ஈடுசெய்ய முடியும் என்று அவருக்குத் தெரியும் என்பதால், தனது நேரத்தை எடுத்துக்கொள்கிறார். ஒரு வீரராக அந்த நம்பிக்கை உங்களுக்கு அதைத்தான் செய்யும்," என்று குறிப்பிட்டார்.
"தூபே இந்திய அணிக்காக அதைச் செய்துள்ளார். இப்போது, ஐபிஎல் தொடரிலும் அதே போல் செயல்பட வேண்டுமென்று சிஎஸ்கே அணி அவரிடம் எதிர்பார்க்கிறது. எனவே, நடு ஓவர்களைப் பற்றி பேசும்போது, சிஎஸ்கே அணி ஷிவம் தூபேவை களமிறக்கி முக்கியமான ரன்களைக் குவிக்கவே எதிர்பார்க்கும் என்பதால், அவருக்கு ஒரு பெரிய பொறுப்பு உள்ளது," எனச் சேர்த்தார்.
ஷிவம் தூபே டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் எட்டு இன்னிங்ஸ்களில் 169.06 ஸ்ட்ரைக் ரேட்டில் 235 ரன்களைக் குவித்தார். ஐபிஎல் 2025 தொடரில் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர் இவர்தான். அந்தப் போட்டிகளில் 14 இன்னிங்ஸ்களில் 132.22 ஸ்ட்ரைக் ரேட்டில் 357 ரன்களைச் சேர்த்தார்.
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இளம் வீரர் ஆயுஷ் மகாத்ரேவிடம் இருந்து என்னவிதமான பங்களிப்பை எதிர்பார்க்கிறது என்று பியூஷ் சாவ்லாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சாவ்லா, "ஐபிஎல் தொடரில் அவர் தொடங்கிய விதம் காரணமாக அணி அவரிடம் நிறைய எதிர்பார்க்கிறது. அவர் சில முக்கியமான ரன்களைக் குவித்தார். முக்கியமாக அவரின் ஆட்ட அணுகுமுறை சிறப்பாக இருந்தது. டி20 போட்டியில் இது குறித்துத்தான் பேசுகிறோம், அதைத்தான் அவர் உண்மையில் வெளிப்படுத்தினார். 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையை வென்ற பிறகு அவரது நம்பிக்கை நிச்சயமாக அதிகமாக இருக்கும்," என்று பதிலளித்தார்.
மும்பையைச் சேர்ந்த இளம் வீரரான ஆயுஷ் மகாத்ரே, ஐபிஎல் 2026 தொடரில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் பேட் செய்ய வேண்டியிருக்கும் என்றும் சாவ்லா தெரிவித்தார். இது குறித்து சாவ்லா கூறுகையில், "அவர் முதல் தரக் கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ளார். மும்பை அணிக்காக அவர் சிறப்பாகச் செயல்பட்டது ஒரு வீரராக பல நம்பிக்கையை அளிக்கிறது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரிடம் இருந்து அவர் கற்றுக்கொள்வார்," என்றார்.

"அவர் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பில்லாமல் போகலாம், ஆனால் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தைப் பூர்த்தி செய்ய அவர் தகுதியுடையவர்," என்று சுட்டிக்காட்டினார். ஆயுஷ் மகாத்ரே ஐபிஎல் 2025 தொடரில் ஏழு இன்னிங்ஸ்களில் 188.97 ஸ்ட்ரைக் ரேட்டில் 240 ரன்களை அடித்துள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்க வாய்ப்புள்ளதால், இந்த சீசனில் அவர் பேட்டிங் வரிசையின் தொடக்கத்தில் ஆடாமல் போகலாம்.