IPL 2026: தோனி, ரோகித் சாதித்தது போல் ஸ்ரேயாஸ் ஐயர் சாதிப்பார்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் கருத்து
சென்னை: ஐபிஎல் 2026 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ஐபிஎல் கோப்பையை வெல்ல ஷ்ரேயாஸ் ஐயர் வழிநடத்தினால், அவர் ஜாம்பவான்களான எம்.எஸ். தோனி மற்றும் ரோஹித் சர்மா போன்றோரையும் மிஞ்சுவார் என முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர், தனது தலைமையிலான அணியை கோப்பையை வெல்லும் முக்கிய அணிகளில் ஒன்றாக நிலைநிறுத்தியுள்ளார்.
19 வருட காத்திருப்புக்குப் பிறகு, பஞ்சாப் அணிக்கு முதல் ஐபிஎல் பட்டத்தை வெல்லும் முனைப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளார். முன்னதாக, ஷ்ரேயாஸ் ஐயர் டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகளை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பையையும் வென்று கொடுத்தார். அவரது தனித்துவமான தலைமைத்துவப் பண்புகளே இதற்கு முக்கிய காரணம் என கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இது குறித்து பேசிய இர்பான், "தோனி, ரோஹித் சர்மா மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோரின் பட்டியலில், ஷ்ரேயாஸ் ஐயர் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ வேண்டும் என்று நான் உணர்கிறேன்" என்று குறிப்பிட்டார். வெவ்வேறு அணிகளின் கலாசாரம் மற்றும் மனநிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு வெற்றி பெறுவது எளிதான காரியம் அல்ல என்றும் பதான் சுட்டிக்காட்டினார்.
"மூன்று வெவ்வேறு அணிகளை இறுதிப் போட்டிக்கு கொண்டு செல்வது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு அணியும், அதன் கலாச்சாரமும், அமைப்பும், மனநிலையும் முற்றிலும் மாறுபட்டது. அவற்றை தகவமைத்துக் கொண்டு, அணியை வழிநடத்துவது கடினம். தோனி தனது ஐந்து கோப்பைகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மட்டுமே வென்றார். அவர் வேறு எந்த அணிக்கும் ஐபிஎல் தலைவராக விளையாடவில்லை."
அதேபோல், ரோஹித் சர்மா தனது அனைத்து கோப்பைகளையும் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாகவே பெற்றார். கௌதம் கம்பீர் தனது இரண்டு ஐபிஎல் கோப்பைகளையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவே வென்றார். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் மூன்று வெவ்வேறு அணிகளை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று, கொல்கத்தாவுடன் கோப்பையையும் வென்றார்.
அவர் பஞ்சாப் அணியுடனும் ஒரு கோப்பையை வென்றால், அவர் அனைவரையும் மிஞ்சுவார்" என்று இர்பான் பதான் தெரிவித்தார். கடந்த சீசனில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பஞ்சாப் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் 9 ஆட்டங்களில் 13 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதன் மூலம் பிளேஆஃப் சுற்றுக்கு கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.


Click it and Unblock the Notifications