மும்பை: ஷ்ரேயஸ் ஐயர் 2028ஆம் ஆண்டுக்குள் இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க வலுவான வாய்ப்புள்ளதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். வரவுள்ள ஐபிஎல் 2026 தொடரில் அவரது தலைமைத்துவம் சிறப்பாக அமைந்தால், அடுத்த டி20 உலகக்கோப்பையை வெல்லும் கேப்டனாக ஐயர் உருவெடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்க இருப்பதால், அணி நிர்வாகம் புதிய தலைவரைத் தேடலாம் என சோப்ரா குறிப்பிட்டுள்ளார். ஜியோஸ்டார் ஐபிஎல் நிகழ்ச்சியில் பேசிய சோப்ரா, ஷ்ரேயஸ் ஐயரின் ஆரம்பகால கேப்டன்சி பயணத்தைப் பற்றி விளக்கினார். அதன்படி, டெல்லி கேபிடல்ஸில் தொடங்கிய அவரது தலைமைப் பயணம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தது.

பின்னர் பஞ்சாப் கிங்ஸ் அணியை 2025ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றது. 2021ஆம் ஆண்டு ஐயருக்குக் காயம் ஏற்பட்டபோது, டெல்லி அணி அவருக்குப் பதிலாக ரிஷப் பன்ட்டைத் தேர்ந்தெடுத்ததையும் சோப்ரா நினைவு கூர்ந்தார். கேப்டன் பொறுப்புக்கான விருப்பத்தால் ஐயர் டெல்லி அணியை விட்டு வெளியேறி, மற்ற அணிகளில் சிறப்பாகச் செயல்பட்டதாக சோப்ரா தெரிவித்தார்.

2024இல் கொல்கத்தா அணியின் தலைமைத்துவத்தில், கம்பீர் போன்ற ஒரு பிரபலமான பயிற்சியாளர் முன்னிலையில், ஐயரின் பங்கு சற்று மறைக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவுக்காகப் பெற்ற வெற்றிகள் விராட் கோலி, எம்.எஸ். தோனி, ரோஹித் ஷர்மா போல் இல்லாததால், ஐயருக்குத் தேவையான பாராட்டு கிடைக்கவில்லை என்றும் சோப்ரா கூறினார்.
"ஷ்ரேயஸ் ஐயர் இன்னும் ஒரு கோப்பையை வென்றால், எல்லாம் திடீரென மாறி, அனைவரும் கைதட்டுவார்கள் என நம்புவது சாத்தியமில்லை," என்று ஆகாஷ் சோப்ரா திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், "பாராட்டுக்கள் அதிகரிக்கலாம். ஆனால் அவரது ஆளுமை ஒரே இரவில் மாறாது. இது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் மட்டுமே நிகழ முடியும். அடுத்த டி20 உலகக் கோப்பை 2028இல் வருகிறது. இந்திய டி20 தலைமைத்துவம் உடனடியாக மாறும் என்று நான் கூறவில்லை, ஆனால் ஓரிரு ஆண்டுகளுக்குள் அதற்கான வாய்ப்பு உள்ளது" என்றும் அவர் விளக்கினார்.
"அவர் அந்த இடத்திற்கு முனைப்புடன் உரிமை கோரி, முதல் அளவுகோலான ரன்களைக் குவித்து, தனது அணியை பிளேஆஃப்கள், இறுதிப் போட்டி அல்லது கோப்பைக்கு அழைத்துச் சென்று, அடுத்த 12 மாதங்களுக்குள்ளோ அல்லது அடுத்த உலகக் கோப்பைக்குள்ளோ இந்திய டி20 அணியின் கேப்டனாக மாறினால், அனைத்தும் மாறும்" என்று சோப்ரா விளக்கினார்.

"அவர் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வென்ற கேப்டனாக கூட ஆகலாம். அந்த மதிப்பு தனித்துவமானது. அப்போது அவருக்கு எந்தவொரு வெளிப்புற ஆதரவும் தேவைப்படாது" என்றும் அவர் கூறினார்.இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, வரவிருக்கும் ஐபிஎல் 2026 தொடரில் தங்களது திறனை நிரூபிக்க தயாராகி வருகிறது. அவர்கள் மார்ச் 31ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தங்கள் முதல் போட்டியில் களமிறங்கவுள்ளனர்.