IPL 2026: எந்த கேப்டனும் செய்யாத மாஸ் ரெக்கார்டு.. மிரட்டிய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்
லக்னோ: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் எந்த ஒரு கேப்டனும் செய்யாத ஒரு சாதனையை பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்தியுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான வாழ்வா-சாவா போராட்டத்தில் அதிரடியாகச் சதம் விளாசிய அவர், 4-வது வரிசையில் களம் இறங்கி சதம் அடித்த முதல் ஐபிஎல் கேப்டன் என்ற புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளார். இந்த அபார வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி தனது பிளே-ஆப் கனவை உயிர்ப்புடன் வைத்துள்ளது.
லக்னோவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய லக்னோ அணி 196 ரன்கள் குவித்தது. 197 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி, 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த போது ஸ்ரேயாஸ் ஐயர் களம் புகுந்தார். மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர் மழை பொழிந்த அவர், வெறும் 51 பந்துகளில் 101 ரன்கள் விளாசினார். இதில் 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். இவரது அதிரடியால் பஞ்சாப் அணி 18 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வரலாற்றுச் சாதனை
ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன்பு 16 முறை கேப்டன்கள் சதம் அடித்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் முதல் 3 வரிசை வீரர்களாகவே இருந்துள்ளனர். 4-வது வரிசை அல்லது அதற்கும் கீழ் களம் இறங்கி ஒரு கேப்டன் சதம் அடிப்பது இதுவே முதல்முறை. மேலும், ஐபிஎல் வரலாற்றில் இலக்கைத் துரத்தும் போது சதம் அடித்த 4-வது கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு வீரேந்தர் சேவாக், விராட் கோலி மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்துள்ளனர். பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை ராகுல் மற்றும் கில்கிறிஸ்ட் சதம் அடித்திருந்தாலும், அவர்கள் முதலில் பேட்டிங் செய்த போதே அதனை நிகழ்த்தினர்.
மும்பையை நம்பும் பஞ்சாப்
தொடர்ச்சியாக 6 தோல்விகளைச் சந்தித்த பஞ்சாப் அணிக்கு இந்த வெற்றி ஒரு மிகப்பெரிய மருந்தாக அமைந்துள்ளது. வெற்றி குறித்துப் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், "சரியான நேரத்தில் இந்தச் சதம் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று எனது மனநிலை மிகவும் தெளிவாக இருந்தது. ஆடுகளம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப விளையாடினேன். இப்போது எங்களது பிளே-ஆப் வாய்ப்பு மும்பை இந்தியன்ஸ் கையில் உள்ளது. நாளை நடக்கும் போட்டியில் மும்பை அணி ராஜஸ்தானை வீழ்த்த வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்" என்றார்.
15 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி காத்திருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி அந்த அணியின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும். ஸ்ரேயாஸின் இந்த 'மாஸ்' இன்னிங்ஸ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
