IPL 2026: விராட் கோலியை காப்பியடித்த சுப்மன் கில்.. அதிரடி வீரர் சேவாக் கருத்து
அகமதாபாத்: ஐபிஎல் 2026 போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராகக் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் ஒரு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக முன்னாள் இந்திய தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார். அகமதாபாத்தில் நடந்த இப்போட்டியில் 156 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணி, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கில், 18 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 43 ரன்கள் விளாசினார்.
குறிப்பாக, ஜோஷ் ஹேசில்வுட்டின் முதல் ஓவரிலேயே 24 ரன்கள் குவித்து, குஜராத் 15.5 ஓவர்களில் இலக்கை எட்ட உதவினார். போட்டிக்கு பிறகு பேசிய சேவாக், கில் பவுண்டரிகளை அடித்தபோது, ஆர்சிபி மூத்த வீரர் விராட் கோலி மைதானத்தில் மேலும் உற்சாகமானார். கோலியின் அந்த உத்வேகமான ஆற்றலைக் காண்பது வேடிக்கையாக இருந்தது.

“ஷுப்மன் கில் அடித்த ஒவ்வொரு பவுண்டரிக்கும், விராட் கோலி மேலும் உற்சாகமானார். இந்த வயதிலும் கோலி இவ்வளவு சக்தியைக் காட்டுவது பார்ப்பதற்கு உண்மையிலேயே சந்தோஷமாக இருந்தது. ஷுப்மன் கில் ஒரு தரமான ஆட்டக்காரர். இன்று அவரது பேட்டிங்கைப் பார்ப்பது அற்புதம். அவர் 18 பந்துகளில் சுமார் 43 ரன்கள் எடுத்தார். அவர் எவ்வளவு ஆக்ரோஷமாக ஆடினாரோ, அதைப் பார்த்தால், பவர் பிளேக்குள்ளேயே ஆட்டத்தை முடித்துவிடுவார் என்று ஒரு கட்டத்தில் தோன்றியது.
ஆனால், சற்று அதிர்ஷ்டமும் தேவைப்பட்டது. அந்த கேட்ச் விராட் கோலியின் கைகளில் நேராகச் சிக்காமல் சற்றே விலகிப் போயிருந்தால், அது பவுண்டரியாகியிருக்கும்,” என சேவாக் விளக்கினார்.நடப்பு சீசனில், 26 வயதான கில் எட்டு இன்னிங்ஸ்களில் மூன்று அரை சதங்கள் உட்பட 46.62 சராசரி மற்றும் 155.41 ஸ்ட்ரைக் ரேட்டுடன் மொத்தம் 373 ரன்கள் குவித்துள்ளார்.அதே கலந்துரையாடலில், சேவாக், ஜோஷ் ஹேசில்வுட்டிற்கு எதிராக கில் வகுத்த திட்டத்தைப் பாராட்டினார்.
ஹேசில்வுட்டின் லைன் மற்றும் லென்த்தை தவறிழைக்கச் செய்த கில், விராட் கோலியின் அணுகுமுறையைப் பின்பற்றி, பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தார்.இதனை சுட்டிக்காட்டி பேசிய சேவாக், “ஹேசில்வுட் சரியான லென்த்தில் வீசுவார் என்பதை அறிந்த கில், அந்த லென்த்தை திசைதிருப்புவது முக்கியமானது என உணர்ந்தார். அதனால்தான் அவர் ரிஸ்க் எடுத்து, தனது footwork ஐ பயன்படுத்தினார்.
அவர் முன்னங்கால் மற்றும் பின்னங்கால் பயன்படுத்தி அடித்த சிக்சர்களும் பவுண்டரிகளும் சிறப்பாக இருந்தன. பந்துவீச்சாளர்களுக்கு எதிராக முன் வந்து அடிக்கும் பாணியை விராட் கோலியும் செய்வார், இல்லையா? எனவே கில், கோலியின் பாதையைப் பின்பற்றி, பவுண்டரிகளைப் பெறத் தன் கால்திறனைத் திறம்பட பயன்படுத்தினார்,” என்றார்.
“நீங்கள் கேப்டனாக இருக்கும்போது, சிறந்த பந்துவீச்சாளர் மீது ரன்கள் குவித்து, மொத்த பந்துவீச்சுப் படையையும் மனரீதியாகப் பலவீனப்படுத்த முடிவு செய்வீர்கள். அதுதான் இங்கும் நடந்தது. ஹேசில்வுட் 22-24 ரன்கள் விட்டுக் கொடுத்த தருணத்தில், ஆட்டம் மிக விரைவாக முடிந்துவிடும் என்று தோன்றியது.”தற்போது, குஜராத் டைட்டன்ஸ் அணி ஒன்பது ஆட்டங்களில் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications