IPL 2026: "வெற்றிபெற எங்களுக்குத் தகுதியே இல்லை".. சுப்மன் கில் ஆவேசம்.. தோல்விக்கு பின் பேச்சு
கொல்கத்தா: ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 29 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் தோல்வியடைந்தது. கடந்த 5 போட்டிகளாகத் தொடர்ந்து வெற்றி பெற்று 'அசைக்க முடியாத அணி'யாக வலம் வந்த குஜராத்தின் வெற்றிப் பயணம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்தப் போட்டியில் குஜராத் அணி ரன்களைக் கொடுத்ததை விட, அந்த அணி வீரர்கள் செய்த ஒரு 'மன்னிக்க முடியாத' தவறு தான் கேப்டன் சுப்மன் கில்லை கொதிப்படையச் செய்தது.
டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த குஜராத் அணிக்கு, பீல்டிங் ஒரு பெரும் சோதனையாக அமைந்தது. கொல்கத்தா வீரர்கள் கொடுத்த நான்கு மிக எளிமையான கேட்சுகளை குஜராத் வீரர்கள் அடுத்தடுத்து கோட்டைவிட்டனர். குறிப்பாக, அதிரடி ஆட்டக்காரர் பின் ஆலன் 14 மற்றும் 33 ரன்களில் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டது அந்த அணிக்கு பெரும் வினையாக முடிந்தது. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்ட பின் ஆலன், 35 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார்.

தவறிய வாய்ப்புகள்
இதேபோல் கேமரூன் கிரீன் 23 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்ச் வாய்ப்பும் நழுவவிடப்பட்டது. அவர் 52 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இளம் வீரர் ரகுவன்ஷி கொடுத்த வாய்ப்பும் வீணடிக்கப்பட்டது. இப்படி வரிசையாகக் கிடைத்த நான்கு கேட்ச் வாய்ப்புகளைக் குஜராத் வீரர்கள் தாரைவார்த்ததால், கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 247 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.
கில்லின் ஆவேசம்
அடுத்து 248 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 218 ரன்கள் எடுத்துப் போராடித் தோல்வியடைந்தது. போட்டிக்குப் பின் பேசிய கேப்டன் சுப்மன் கில் தனது அணியினரை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், "இந்த ஆடுகளத்தில் 210 ரன்கள் என்பதே ஒரு சவாலான இலக்கு தான். ஆனால் நாங்கள் மிக எளிமையான 3 அல்லது 4 கேட்சுகளைத் தவறவிட்டோம். ஒரு குறிப்பிட்ட தரத்தை நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம், ஆனால் இப்படிச் சிறுபிள்ளைத்தனமாக கேட்சுகளை விட்டால் நாங்கள் வெற்றிபெறத் தகுதியானவர்களே இல்லை.
நிச்சயமாக இது ஒரு ஏமாற்றமான ஆட்டம் தான். இருப்பினும், தகுதி சுற்றுப் போட்டிகளில் (Qualifiers) இது போன்ற தவறுகள் நடப்பதை விட, லீக் சுற்றிலேயே இது நடந்தது ஒரு வகையில் நல்லது. இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவோம்" எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications