சென்னை: ஐபிஎல் 2026 சீசனின் முதல் பாதி ஆட்டங்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதியதாக ஒப்பந்தம் செய்துள்ள ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ்க்குப் பதிலாக சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள ஜான்சன், ஏப்ரல் 21 முதல் 23 வரையில் அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஸ்பென்சர் ஜான்சன்,ஐபிஎல் தொடரில் 2024 ஆம் ஆண்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும், 2025 ஆம் ஆண்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் விளையாடிய அனுபவம் கொண்டவர். மார்ச் 24, செவ்வாய்க்கிழமை அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

முன்னதாக, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான நாதன் எல்லிஸ் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ₹2 கோடிக்கு சிஎஸ்கேவால் வாங்கப்பட்டார். ஆனால், கடந்த வாரம் ஏற்பட்ட காயம் காரணமாக 2026 ஐபிஎல் தொடரில் இருந்து அவர் விலகியதை அடுத்து, அவருக்குப் பதிலாக ஜான்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது சிஎஸ்கேவுக்கு ஏற்பட்ட ஒரு பின்னடைவாக பார்க்கப்பட்டது.

எனினும், ஜான்சன் ஐபிஎல் 2026 சீசனின் முதல் பாதி ஆட்டங்களுக்கான தேர்விற்கு உடனடியாக கிடைக்கமாட்டார். இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டப் பதிவின்படி, ஜான்சன் ஏப்ரல் 21 முதல் 23 ஆம் தேதிக்குள் சிஎஸ்கே அணியில் இணைவார் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த தாமசத்தை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் தங்கள் எக்ஸ் பக்கத்தில், "மஞ்சளில் இருந்து மஞ்சள் நேசத்திற்கு. ஆஸ்திரேலியாவில் இருந்து வேக பலம் வந்துள்ளது. நாதன் எல்லிஸ்க்குப் பதிலாக ஸ்பென்சர் ஜான்சன். அவர் ஏப்ரல் 21 மற்றும் 23 ஆம் தேதிக்குள் அணியில் இணைய உள்ளார்" எனப் பதிவிட்டிருந்தது.
உள்நாட்டுப் போட்டிகளில் தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடும் ஜான்சனின் உடல்நிலை குறித்து, அணியின் பயிற்சியாளர் ரியான் ஹாரிஸ் சமீபத்தில் பேசினார். "நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்பு, ஜான்சன் தனது முதுகு வலி குறித்து நல்ல செய்தி பெற்றார். அவரது முதுகில் இருந்த காயம் இறுதியாக முழுமையாக குணமடைந்துவிட்டது. கடந்த 8-10 மாதங்களாக அவருக்கு இது பெரும் சவாலாக இருந்தது. இப்போது அவர் மீண்டும் பந்துவீசத் தொடங்கி, உடற்தகுதியை மேம்படுத்தி வருகிறார்" என ஹாரிஸ் தெரிவித்தார்.

ஐபிஎல் வாய்ப்பு குறித்தும் ஹாரிஸ் கருத்து தெரிவித்தார். "ஐபிஎல்-இல் ஒரு வாய்ப்பு இருக்கலாம் என நினைக்கிறேன். அங்கு என்ன நடக்கிறது என்பதை இன்னும் நாங்கள் காத்திருந்து பார்க்க வேண்டும். போட்டிக்குரிய கிரிக்கெட்டுக்குத் திரும்புவதற்கு முன்பு அவர் கணிசமான அளவு பந்துவீச வேண்டியுள்ளது. நாங்கள் இப்போதே அதற்கான பணிகளைச் செய்து வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்பென்ஸ் துரதிர்ஷ்டவசமாக சில சிக்கல்களைச் சந்தித்து வருகிறார். மீண்டும் அவர் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்ப்பது நன்றாக இருக்கும்," என்று ஹாரிஸ் கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்காக டி20 போட்டிகளிலும், ஐபிஎல்-இல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடிய அனுபவம் கொண்ட ரியான் ஹாரிஸ், ஸ்பென்சர் ஜான்சனின் பந்துவீச்சு நுட்பங்களில் சில மாற்றங்களைச் செய்து வருவதாகத் தெரிவித்தார். எதிர்காலத்தில் அவருக்கு முதுகுப் பிரச்னைகள் வராமல் தடுப்பதே இந்தச் சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம்.
"அவர் பந்துவீசத் தொடங்கிய நாளிலிருந்து இதற்கான பணிகளைச் செய்து வருகிறோம். சில விஷயங்களைச் சரிசெய்து வருகிறோம். இப்போது ஜான்சன் நன்றாகவே பந்துவீசுகிறார். முன்தினம் அவர் பந்துவீசினார். பந்துவீச்சை சீராக்கி, அவரது முதுகின் மீதான அழுத்தத்தைக் குறைக்க முயற்சிக்கிறோம்," என்று பயிற்சியாளர் ஹாரிஸ் விளக்கினார்.
"இந்த மாற்றங்களை சிறப்பாகச் செய்துள்ளார் ஜான்சன். அவர் தற்போது 60% வேகத்தில் பந்துவீசினாலும், பந்து நன்றாக வருகிறது என்று உணர்கிறார். அதன்படி, நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் அவர் மேலும் அதிக பந்துகளை வீசிக்கொண்டிருக்கிறார். அவரது உடலுக்கு பந்துவீச்சு சுமையை ஏற்ற வேண்டும், அப்போதுதான் அவர் மீண்டும் களத்தில் விளையாட முடியும்," என்றும் ஹாரிஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜான்சன் இல்லாத காலகட்டத்தில், நியூசிலாந்தின் மேட் ஹென்றி மற்றும் சாக் ஃபௌல்க்ஸ் ஆகியோர் ஐபிஎல் 2026 இல் சிஎஸ்கேவின் வேகப்பந்து வீச்சு தாக்குதலை வழிநடத்துவார்கள். இவர்களுக்கு இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் ஜேமி ஓவர்டன், இந்திய பந்துவீச்சாளர்களான கலீல் அஹமது, முகேஷ் சவுத்ரி, அன்ஷுல் கம்போஜ் மற்றும் குர்ஜப்னித் சிங் உள்ளிட்டோர் ஆதரவாக இருப்பார்கள்.