IPL 2026: குடும்பத்தை புகைப்படம் எடுக்க முயன்ற ரசிகர்.. கடும் கோபத்துடன் எச்சரித்த SRH வீரர்
ஐதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரரான ஹென்ரிச் கிளாசென், தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்த ரசிகரிடம் கோபமடைந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது ஐபிஎல் 2026 தொடரில் SRH அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டிக்கு ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்திற்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வரும் ஒரு வீடியோவில், புகைப்படம் எடுக்க முயன்ற அந்த ரசிகருக்கு கிளாசென் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். "நான் சொல்வதை மிக கவனமாக கேளுங்கள். இதைச் செய்ய வேண்டாம். நான் வேண்டாம் என்று சொன்னேன். தயவுசெய்து சென்று விடுங்கள்," என்று கிளாசென் கூறினார்.

அவர் மேலும், "புகைப்படம் எடுக்க வேண்டாம். நான் திரும்பிய பிறகு என்னையும் என் குடும்பத்தினரையும் படம் எடுத்தால், நீங்கள் தரையில் இருப்பீர்கள் என உறுதியளிக்கிறேன். திரும்பிச் சென்று விடுங்கள். நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். நிறுத்துங்கள். படம் வேண்டாம். இது என் குடும்பம். கேமராவை எடுத்துவிடுங்கள்," என்று எச்சரித்தார்.
இது கிரிக்கெட் வீரர்களுக்குப் புதிதல்ல. சமீபத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷனும் இதேபோன்ற ஒரு சூழலை எதிர்கொண்டார். செல்ஃபி எடுக்க முனைந்த ரசிகரிடம் இஷான் பணிவாக மறுக்க, அவர் வற்புறுத்தவே, சற்று அதிருப்தியுடன், "வேண்டாம் சார்" என அமைதியாகப் பதிலளித்தார்.
அண்மையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவும் ஒரு ரசிகையால் படம் எடுக்க கையைப் பிடித்து இழுக்கப்பட்டார். இந்த அசம்பாவிதத்தால் ஆச்சரியமடைந்த அந்த இளம் கிரிக்கெட் வீரர், அமைதியாக எந்தச் சலசலப்பையும் ஏற்படுத்தாமல் அங்கிருந்து விலகிச் சென்றார்.
ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக, முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இதே போன்ற ஒரு சம்பவத்தை சந்தித்தார். காரில் அமர்ந்து ரசிகர்களைக் கண்டு கையசைத்தார். கை குலுக்க நீட்டியபோது, ஒரு ரசிகர் செல்ஃபி எடுக்க அவரது கையை இழுக்க முயன்றார். இதனால் அதிருப்தி அடைந்த ரோஹித், உடனடியாக கையை இழுத்து, எச்சரித்து, கண்ணாடி ஏற்றினார்.


Click it and Unblock the Notifications