மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களை தக்க வைக்கின்றோம், எந்த வீரர்களை விடுவிக்கின்றோம் என்பது குறித்து நவம்பர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்திற்குள் அறிவிக்க வேண்டும் என செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனால், ஒவ்வொரு அணியும் மினி ஏலத்திற்கு முன் அதிக பணத்துடன் செல்ல முயற்சிகள் செய்து வருகிறது. இதன் காரணமாக தங்கள் அணியில் உள்ள அதிக விலைக்கு சென்ற வீரர்களை விடுவித்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து மினி ஏலத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளது.

அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தென்னாப்பிரிக்கா வீரர்கள் கிளாசனை 23 கோடி கொடுத்து கடந்த சீசனில் தக்க வைத்துக் கொண்டது. இதனால் அவரை விடுவித்து 23 கோடி வைத்துக்கொண்டு ஏலத்திற்கு செல்ல சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளரான காவியா மாறன் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய ஹென்றிச் கிளாசன் 12 போட்டிகளில் 448 ரன்கள் அடித்திருந்தார்.2024 ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் 479 ரன்னும், 2025 சீசனில் 13 இன்னிங்சில் 487 ரன்களும் அடித்திருந்தார். இதில் ஒரு சதம் ஒரு அரை சதம் அடங்கும் .ஒருவேளை காவ்யா மாறன்,ஹென்றிச் கிளாசனை மினி ஏலத்திற்கு முன்பு விடுவித்தால், அது ஒரு மிகப்பெரிய தவறாக பார்க்கப்படும்.
இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு லட்டு மாதிரி ஒரு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது. சிஎஸ்கே அணியில் ஏற்கனவே பிரவீஸ் உள்ள நிலையில், ஹென்றிச் கிளாசனும் வந்தால் பேட்டிங் பலம் அசுரத்தனமாக மாறிவிடும். கிளாசன் சுழற் பந்து வீச்சை அபாரமாக அடித்து ஆடக்கூடியவர். மேலும் விக்கெட் கீப்பிங் செய்வார். இதன் காரணமாக கிளாசன் ஏலத்திற்கு வந்தால் அவரை பெருந்தொகை கொடுத்து வாங்க சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.