IPL 2026: விராட் கோலி செய்த செயல்.. உறைந்து போன டிராவிஸ் ஹெட்.. போட்டி முடிந்தவுடன் என்ன நடந்தது?
ஹைதராபாத்: 2026 ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டி முடிந்த பிறகு அனைத்து வீரர்களும் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்ட போது, கோலி வேண்டுமென்றே டிராவிஸ் ஹெட்டைத் தவிர்த்துவிட்டுச் சென்றது மைதானத்தில் இருந்தவர்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணியில் விராட் கோலி 15 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இருப்பினும், பெங்களூரு அணி 200 ரன்களை எட்டியதால் புள்ளிப்பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

'இம்பாக்ட் சப்' கிண்டல்
போட்டியின் போது வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த போது, ஸ்லிப் திசையில் நின்றிருந்த டிராவிஸ் ஹெட்டிடம் கோலி ஏதோ சில வார்த்தைகளைக் கூறினார். குறிப்பாக, 'இம்பாக்ட் சப்' சைகையைக் காட்டி, டிராவிஸ் ஹெட்டைப் பந்துவீச வருமாறு கிண்டல் செய்தார். டிராவிஸ் ஹெட் பெரும்பாலும் பேட்டிங் மட்டும் செய்துவிட்டு, பீல்டிங்கின் போது மாற்றப்படுவதைச் சுட்டிக்காட்டியே கோலி இவ்வாறு வம்பிழுத்ததாகத் தெரிகிறது.
புறக்கணித்த கோலி
இந்த மோதல் போட்டியுடன் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டம் முடிந்த பின் வீரர்கள் கைகுலுக்க வரிசையாக வந்தனர். அப்போது மற்ற ஹைதராபாத் வீரர்களுக்குக் கை கொடுத்த விராட் கோலி, தனக்காகக் கையை நீட்டி நின்ற டிராவிஸ் ஹெட்டை மட்டும் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றார். இதனால் ஒரு நிமிடம் திகைத்துப் போன டிராவிஸ் ஹெட், அமைதியாக நகர்ந்து சென்றார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
முதலிடத்தில் ஆர்சிபி
இந்தப் போட்டியில் 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போதிலும், பெங்களூரு அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகளும் தலா 18 புள்ளிகளுடன் இருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் அவர்கள் நேரடியாக முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். தற்போது 4-வது இடத்திற்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய நான்கு அணிகள் இன்னும் களத்தில் உள்ளன.


Click it and Unblock the Notifications
