IPL 2026: "சதங்கள் எல்லாம் அப்புறம்..".. கெயில் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி அதிரடி பேட்டி
சண்டிகர்: 2026 ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் 97 ரன்களில் ஆட்டமிழந்து, மிகக்குறைந்த பந்துகளில் சதம் அடிக்கும் உலக சாதனை வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட 15 வயது அதிரடி நாயகன் வைபவ் சூர்யவன்ஷி, "சதங்கள் எல்லாம் இனி வரும் காலங்களில் வந்து கொண்டே இருக்கும்; இப்போது அணியின் வெற்றி தான் முக்கியம்" எனத் தன்னம்பிக்கையுடன் பேசியுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 28 பந்துகளில் 97 ரன்கள் விளாசிய அவர், கிறிஸ் கெயிலின் ஒரு சீசனில் அதிக சிக்ஸர் அடித்த சாதனையை முறியடித்துப் புதிய வரலாறு படைத்தார். சண்டிகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வைபவ் ஆடிய ஆட்டம் ரசிகர்களை மிரள வைத்தது. 28 பந்துகளில் 97 ரன்கள் எடுத்திருந்தபோது, சிக்ஸர் அடிக்க முயன்று அவர் ஆட்டமிழந்தார்.

இதனால் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகக்குறைந்த பந்துகளில் சதம் அடித்த கிறிஸ் கெயிலின் (30 பந்துகள்) சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை அவர் வெறும் 3 ரன்களில் தவறவிட்டார். ஆட்டமிழந்த பிறகு சில நொடிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்ற வைபவ், பின்னர் ஹைதராபாத் வீரர்களின் வாழ்த்துக்களுடன் வெளியேறினார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு பேசிய வைபவ், "எனக்கு இந்தச் சாதனை குறித்து எதுவும் தெரியாது. நான் ஆட்டமிழந்து வெளியே வந்த பிறகுதான், கிறிஸ் கெயிலின் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையை (65 சிக்ஸர்கள்) நான் முறியடித்தது தெரியவந்தது. எனது கவனம் எப்போதும் தனிநபர் சாதனைகள் மீது இருந்ததில்லை."
"ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே எனது லட்சியம். சதம் அடிப்பதை விட, கோப்பையை வெல்வதுதான் இப்போது எனக்கு முக்கியம். எனது பேட்டிங்கில் ஏதேனும் குறை இருந்தால் அதைச் சரிசெய்வேன். மற்றபடி எதிரணியின் திட்டத்தைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை; எனது திட்டத்தை மட்டும் சரியாகச் செயல்படுத்துவேன்" என்றார்.
வைபவ் ஏற்கனவே தனது குறுகிய ஐபிஎல் பயணத்தில் 2 சதங்களை அடித்துள்ளார். கடந்த ஆண்டு குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து, டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த மிக இளம் வீரர் என்ற சாதனை படைத்தார். இந்த ஆண்டு ஜெய்ப்பூரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 36 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
தற்போது எலிமினேட்டர் போட்டியில் அவரது இந்த 97 ரன்கள் ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்துள்ளது. அடுத்ததாக குவாலிபையர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை ராஜஸ்தான் எதிர்கொள்ள உள்ளது. 15 வயதில் இவ்வளவு முதிர்ச்சியுடன் அவர் பேசிய விதம் கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications