மும்பை: ஐபிஎல் 2026 சீசனில் வெளிநாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாததால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிநாட்டு வீரர்களை வழிக்கு கொண்டு வர கடுமையான விதிகளை அமல்படுத்தும்படி பிசிசிஐக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் இந்திய வீரரான கவாஸ்கர், IPL அணிகள் வெளிநாட்டு வீரர்களுக்காக பெரும் பணம் முதலீடு செய்கின்றன என்றார். தங்களால் வர இயலாது என்பதை எப்போது தெரிவிக்கின்றனர்? முதலீடு செய்யும் அணிகளுக்கு வீரர்களின் முழுமையான அர்ப்பணிப்பு தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தங்கள் கடமை தவறும் வீரர்களுக்கு எதிராக கடுமையான விதிகளை உருவாக்க BCCI தலையிட வேண்டும் என்றும் கவாஸ்கர் கேட்டுக் கொண்டார். வீரர்களின் பங்கேற்பை உறுதி செய்ய விதிமுறைகளில் மாற்றங்கள் அவசியம் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "அணிக்கு 'முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது போதாது. மேலும், அது போட்டி தொடங்கும் நாளுக்கு எவ்வளவு காலம் முன்? நாட்டிற்காக விளையாடுவது முக்கியம் தான், ஆனால், பணத்தை கொட்டி கொடுக்கும் அணிகளுக்கு முழு அர்ப்பணிப்பு கிடைக்க வேண்டாமா?" என்று கவாஸ்கர் கேட்டார்.
"ஒரு பந்துவீச்சாளர் ஒரு போட்டியில் நான்கு ஓவர்கள் மட்டுமே வீச முடியும். பயிற்சியில் அதே எண்ணிக்கையிலான பந்துகளை எந்தச் சிக்கலும் இல்லாமல் வீசியிருந்தால், களத்தில் அதைப் பின்பற்றத் தடுப்பது எது?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

"ஒரு பந்துவீச்சாளராக, இரண்டு மாதங்களில் 14 லீக் போட்டிகளில் 56 ஓவர்கள் வீச வேண்டும். அணி இறுதிப் போட்டிக்கு சென்றால், மேலும் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் 12 ஓவர் வரை வீசுவீர்கள்" என கவாஸ்கர் தெரிவித்தார்.

கொல்கத்தா மட்டுமல்ல, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பாதிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பாட் கம்மின்ஸ் சீசனின் முதல் பாதிக்கு விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் திரும்புவதற்கான காலக்கெடுவும் எதுவும் இல்லை. மிட்செல் ஸ்டார்க் இல்லாமல் டெல்லி அணியும், நாதன் எல்லீஸ் இல்லாமல் சிஎஸ்கே அணியும், லோகி பெகுர்சன் இல்லாமல் பஞ்சாப் அணியும் நடப்பு சீசனில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.