IPL 2026: “தோனி சிஎஸ்கே அணியில் விளையாட வாய்ப்பே இல்லை ஏன் என்றால்..” சுனில் கவாஸ்கர் விளக்கம்
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் சிஎஸ்கே ஜாம்பவான் தோனி விளையாட வாய்ப்பில்லை என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணி தனது பிளே-ஆப் வாய்ப்புக்காகக் கடும் நெருக்கடியில் உள்ள நிலையில், நீண்ட நாட்களாகக் காயம் காரணமாக விளையாடாத தோனி திடீரென அணியில் இணைவது அணிக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2026 ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத தோனி, வாழ்வா-சாவா நிலையில் நடக்கும் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக களம் இறங்குவது சந்தேகமே என்று கவாஸ்கர் கருதுகிறார். இது குறித்து அவர் கூறுகையில், "தோனி விளையாடுவது கடினம் என்றே தோன்றுகிறது. ஏனெனில் சிஎஸ்கே அணிக்கு இது முன்னேறுவதற்கான மிக முக்கியமான போட்டி. இதில் வெற்றி பெற்றே தீர வேண்டும்."
"இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத தோனி, இப்போது விளையாடுவதால் அணியின் சமநிலை பாதிக்கப்படுவதை அவர் விரும்ப மாட்டார். தான் சரியாக விளையாடாவிட்டால் அது அணிக்குத் தோல்வியைத் தேடித் தரும் என்று அவர் நினைப்பார். அவர் ஒரு சிறந்த அணி வீரர். அவரது காயம் இன்னும் முழுமையாகக் குணமடையாமல் இருக்கலாம்" என்றார்.

சென்னை அணிக்கு இதுவே இந்தச் சீசனின் கடைசி சொந்த மைதான போட்டி ஆகும். ஏற்கனவே தனது கடைசி டி20 போட்டி சென்னையில் தான் இருக்கும் என்று தோனி கூறியிருந்ததால், இந்தப் போட்டியில் அவர் நிச்சயம் விளையாடுவார் என்று ரசிகர்கள் பெரும் நம்பிக்கையோடு காத்திருந்தனர். நேற்று அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோக்கள் பரவியதால் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. இருப்பினும், சுனில் கவாஸ்கரின் இந்தத் தகவல் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
2026 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே ஏற்பட்ட கெண்டைக்கால் தசைப்பிடிப்பு காரணமாக தோனி அவதிப்பட்டு வருகிறார். முதலில் 2 வாரங்கள் ஓய்வு என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 2 மாதங்கள் ஆகியும் அவர் முழு உடல் தகுதியை எட்டவில்லை. இடையில் மீண்டும் ஒருமுறை காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்த போதிலும், தற்போது பிளே-ஆப் நெருக்கடி இருப்பதால் சிஎஸ்கே நிர்வாகம் எந்த ரிஸ்க்கையும் எடுக்கத் தயாராக இல்லை.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சிஎஸ்கே அணி ஆடும் போட்டியில் தோனி விளையாடாவிட்டாலும், மைதானத்திற்கு வந்து வீரர்களை உற்சாகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் மட்டுமே ரசிகர்களுக்குத் தங்களது நாயகனை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். ஒருவேளை அவர் விளையாடத் தவறினால், இதுவே அவரது ஐபிஎல் பயணத்தின் முடிவாகவும் இருக்கலாம் என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications

