மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், பாகிஸ்தான் கிரிக்கெட் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்த விமர்சனங்களுக்கு தற்போது காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹண்ட்ரட் தொடருக்கான ஏலத்தில் பாகிஸ்தான் வீரரை வாங்கியதை கவாஸ்கர் விமர்சித்ததைத் தொடர்ந்து இந்த சர்ச்சை வெடித்தது.
தி ஹண்ட்ரட் தொடரில் விளையாடும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியை, சென்னையைச் சேர்ந்த சன் நெட்வொர்க் குழுமத்தை சேர்ந்த காவ்யா மாறன் நிர்வகித்து வருகிறார். சமீபத்தில் நடந்த ஏலத்தில் அந்த அணி பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை 2.35 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலையில், குறிப்பாக பகல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய உரிமையாளர்களின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது.

இதனைச் சுட்டிக்காட்டிய சுனில் கவாஸ்கர், இந்திய உரிமையாளர்கள் கொடுக்கும் பணம் பாகிஸ்தான் வீரர்களுக்குச் சென்று, அவர்கள் செலுத்தும் வருமான வரி மூலம் அந்நாட்டு அரசுக்குச் செல்கிறது. அந்தப் பணத்தில் வாங்கப்படும் ஆயுதங்கள் மூலம் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு இது மறைமுகமாகக் காரணமாகிறது என்று தனது கட்டுரையில் கடுமையாகச் சாடியிருந்தார்.
கவாஸ்கரின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து, 2025 ஆசிய கோப்பை தொடரின்போது அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் நிகழ்ச்சியில் பங்கேற்றதைச் சுட்டிக்காட்டி ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். இதற்கு ஊடகம் ஒன்றிற்கு விளக்கமளித்த கவாஸ்கர், "நான் ஐசிசி மற்றும் ஏசிசி அமைப்புகளின் வர்ணனையாளர் குழுவில் தான் பணியாற்றினேன். அதிலிருந்து வரும் வருமானம் பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் தான் சென்றது. எந்தவொரு இந்திய நிறுவனத்திடம் இருந்தும் பாகிஸ்தானுக்குப் பணம் செல்லவில்லை. மேலும், நான் எந்தவொரு வர்ணனையாளருக்கும் எனது சொந்தப் பணத்தைக் கொடுக்கவில்லை" என்று விளக்கம் அளித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், "மற்ற விளையாட்டுகளில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால், இந்தியர்கள் பாகிஸ்தானியர்களுக்குப் பணம் கொடுப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்பதே எனது ஒரே கோரிக்கை. நீங்கள் கவனித்துப் பார்த்தால், கடந்த பல ஆண்டுகளில் பாகிஸ்தானியர்கள் நமக்கு இப்படிப் பணம் கொடுத்ததே இல்லை. உரிமையாளர் ஒரு இந்தியராக இருக்கும்பட்சத்தில், அவர் வெளிநாட்டில் ஒரு துணை நிறுவனத்தை வைத்து பாகிஸ்தான் வீரருக்குப் பணம் கொடுத்தாலும், அது இந்தியர்களின் உயிரிழப்புக்கு மறைமுகமாகப் பங்களிக்கிறது என்பதே எனது உறுதியான நிலைப்பாடு" என்று அவர் தனது கருத்தை மீண்டும் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.
