மும்பை: ஐபிஎல் 2026 தொடர் வரும் மார்ச் 28 அன்று தொடங்கவுள்ள நிலையில், வெளிநாட்டு வீரர்கள் சிலர் இந்த ஆண்டு தாமதமாக வருவதைக் கண்டித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட வீரர்களை அணி உரிமையாளர்கள் தயவுதாட்சண்யமின்றி நீக்க வேண்டும் என்று அவர் ஆவேசமாக வலியுறுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் பணிச்சுமை மற்றும் காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவித்துள்ளது. இதுதவிர மேலும் சில வெளிநாட்டு வீரர்களும் தனிப்பட்ட காரணங்களுக்காகத் தாமதமாகவே அணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு வீரர்களின் இந்தச் செயல் குறித்து ஸ்போர்ட்ஸ்டார் பத்திரிக்கையில் சுனில் கவாஸ்கர் எழுதியுள்ள கட்டுரையில், "சில வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். அணி உரிமையாளர்கள் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் அந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் எந்தவொரு செலவுமின்றி இந்திய விருந்தோம்பல் பண்புடன் பல வசதிகளை அணி நிர்வாகம் செய்து தருகிறது. ஆனால், இந்த விருந்தோம்பலைத் தங்களுக்குரிய உரிமையாக நினைத்துக்கொண்டு சில வெளிநாட்டு வீரர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும் தொடர்ந்துள்ள அவர், "ஏலத்திற்கு முன்பு எந்தவொரு தகவலும் தெரிவிக்காமல், இப்போது திடீரெனத் தனிப்பட்ட காரணங்களுக்காக வரமாட்டோம் அல்லது தாமதமாக வருவோம் என்று கூறுவது அணியின் ஒட்டுமொத்த திட்டத்தையும் சீர்குலைத்துவிடும். அணி உரிமையாளர்கள் இதைக் கடுமையாகக் கையாண்டு, தங்களுக்கு இஷ்டமான நேரத்தில் வரும் வீரர்களை அணியிலிருந்து நீக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்" என்று கவாஸ்கர் காட்டமாக கூறியுள்ளார்.

19 ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. மே 31 வரை நடைபெறும் இந்தத் தொடரில் ராஜஸ்தான் அணியின் சாம் கரண், கொல்கத்தா அணியின் ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். இலங்கை வீரர் மதீஷா பதிரானாவும் தாமதமாகவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது.