ஐதராபாத்: ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், தொடக்கப் போட்டிக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே இந்தியாவை வந்தடைவார். எனினும், மும்பையில் நடைபெறும் அணி கேப்டன்கள் கூட்டத்தில் SRH-ஐ இஷான் கிஷன் பங்கேற்பார் என தெரிகிறது.
முன்னதாக, உடற்தகுதி சிக்கல்கள் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் சீசனின் முதல் சில ஆட்டங்களைத் தவறவிடுவார் என்று SRH தரப்பு தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவல்படி, கம்மின்ஸ் மார்ச் 24 அன்று பெங்களூரு வந்தடைவார். இதன் மூலம், நடப்பு சாம்பியன்களான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிராக சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் தொடக்கப் போட்டிக்கு முன்னதாக, அணியுடன் குறைந்தது மூன்று நாட்கள் பயிற்சிக்கு அவருக்குக் கிடைக்கும்.

மார்ச் 25 அன்று மும்பையில் நடைபெறவுள்ள ஐபிஎல் அணி கேப்டன்கள் கூட்டத்தில், துணை கேப்டன் இஷான் கிஷன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பில் பங்கேற்பார். பத்து அணி கேப்டன்களும் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டத்தில், நண்பகலில் புகைப்படமும், அதைத் தொடர்ந்து மாலை 4:30 மணி முதல் 6 மணி வரை BCCI அதிகாரிகள் மற்றும் ஒளிபரப்பாளர்களுடன் விரிவான கலந்துரையாடலும் இடம்பெறும்.

கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய மூவரும், வரவிருக்கும் நீண்ட சர்வதேசப் போட்டிச் சீசனுக்கான பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, முதல் சில போட்டிகளைத் தவறவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா இவர்களின் பணிச்சுமையை நிர்வகிக்க விரும்புவதாகவும் கூறப்பட்டது. ஸ்டார்க்கிற்கு தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்கப்படவில்லை என்று டெல்லி கேபிடல்ஸ் அணி தெரிவித்திருந்தது. ஆனால் கம்மின்ஸின் முன்கூட்டிய வருகை, அவர் எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே களமிறங்கத் தயாராக இருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.
இதே போன்று காவ்யா மாறன் படைக்கு மற்றொரு நற்செய்தியாக, இலங்கை கிரிக்கெட் வாரியம் வேகப்பந்து வீச்சாளர் இஷான் மாலிங்காவுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது. 25 வயதான மாலிங்கா, தனது சக வீரரான கமிந்து மெண்டிசுடன் மார்ச் 24 அன்று SRH அணியுடன் இணையவுள்ளார். கமிந்து மெண்டிஸ் ஏற்கனவே தனது NOC சான்றிதழைப் பெற்றுள்ளார்.
இருப்பினும், மற்ற இலங்கை வீரர்களான வனிந்து ஹசரங்கா மற்றும் மதீஷா பதிரனா ஆகியோரின் வருகையில் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. கட்டாய உடற்தகுதி சோதனைகளை அவர்கள் இன்னும் முடிக்காததால், இந்தியாவுக்குப் புறப்படுவது தாமதமாகி வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.