ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். அவர்கள் பேட்டிங்கில் 250 ரன்கள் அடித்தாலும், பந்துவீச்சில் அந்த ரன்களை அப்படியே எதிரணிக்கு விட்டுக்கொடுப்பார்கள் என்று அவர் வெளிப்படையாக கிண்டல் செய்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 2026 ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக தனது முதல் லீக் போட்டியில் மோத உள்ளது.
ஆனால், தொடக்கத்திலேயே அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத் அணியின் கேப்டனும், முன்னணி வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அந்த அணியின் பந்துவீச்சுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தனது யூடியூப் சேனலில் இது குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, "ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பெரும் சரிவை சந்தித்துள்ளது. பேட் கம்மின்ஸ் இல்லாததால் அவர்களின் பந்துவீச்சு ஏற்கனவே பலவீனமாக உள்ளது. எஷான் மலிங்காவும் விளையாடாவிட்டால், வெளிநாட்டு வீரரான பிரைடன் கார்ஸை அவர்கள் விளையாட வைக்க வேண்டும். இல்லையெனில், இந்திய பந்துவீச்சாளர்களை மட்டுமே நம்பி களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்" என்று கூறினார்.
மேலும், "அவர்களின் இந்திய பந்துவீச்சாளர்களைப் பார்த்தால் ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட், சிவம் மாவி, அமித் குமார், சாகிப் உசேன், ஓம்கார் தர்மாலே, ஜீஷன் அன்சாரி போன்றோர் உள்ளனர். ஆனால், ஒட்டுமொத்தமாக பந்துவீச்சு மிகவும் பலவீனமாகவே தெரிகிறது. இந்த பந்துவீச்சை வைத்துக்கொண்டு அவர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பது மிகப்பெரிய சவாலாகும். பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு 250 ரன்கள் குவித்தாலும், இவர்களின் பந்துவீச்சு அந்த 250 ரன்களையும் அப்படியே எதிரணிக்கு விட்டுக்கொடுக்கும் வகையிலேயே உள்ளது" என்று அவர் விமர்சித்துள்ளார்.

ஏற்கனவே கேப்டன் பேட் கம்மின்ஸ் இல்லாத நிலையில், கடந்த 2025 ஐபிஎல் ஏலத்தில் 3 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட 25 வயதான ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜாக் எட்வர்ட்ஸ் காயம் காரணமாக இந்த சீசன் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார். அதேபோல, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் எஷான் மலிங்காவும் உடல் தகுதி சோதனைக்காக காத்திருப்பதால் முதல் சில போட்டிகளில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. முன்னணி பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில், பலவீனமான பந்துவீச்சுடன் பெங்களூரு அணியை அவர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
