சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்காக ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய பயிற்சிகளை தொடங்கி இருக்கிறது. இதற்காக சிஎஸ்கே அணி தங்களுடைய சிறப்பு பயிற்சி மையத்தில் கடந்த ஒரு வாரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை போன்று சன்ரைசஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் போன்ற அணிகளும் தங்களது பயிற்சிகளை தொடங்கி இருக்கின்றனர். வரும் 19-வது ஐபிஎல் சீசன் மார்ச் 28ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எனினும் முதல் 20 நாட்களுக்கான அட்டவணை மட்டும் தான் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளை ஒரு எதிரியைப் போல தான் பார்க்கும். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிக்கு இடையே இருக்கும் கிரிக்கெட் பகை ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஒரு ஆர்வத்தைக் கொண்டிருக்கும்.

இதேபோன்று ஆர்.சி.பி ரசிகர்கள் தங்களது அடாவடித்தனத்தால் ஒட்டுமொத்த மற்ற அணி ரசிகர்களையும் எதிரியாக மாற்றி இருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த அணியும் மற்ற அணியை குற்றம் சாட்டி நீதிமன்றம் சென்றதில்லை. இந்த தருணத்தில் சன்ரைசர்ஸ் அணி நிர்வாகமான சன் டிவி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்து இருக்கிறது.
இது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இதற்கு கிரிக்கெட் தொடர்பான காரணம் கிடையாது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதுமே தங்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தோனி மற்றும் அணி வீரர்கள் தொடர்பாக வீடியோக்களை அதிகம் பகிர்வார்கள்.

அந்த வீடியோக்களுக்கு சிஎஸ்கே அணி ரஜினி படங்களின் பாடல்களை தொடர்ந்து பயன்படுத்துவார்கள். ஜெயிலர், கூலி போன்ற பாடல்கள் மற்றும் இசை சிஎஸ்கே அணி வீடியோவில் இடம் பெற்றிருக்கும். இதுதான் தற்போது பிரச்சனைக்கு காரணமாக மாறி இருக்கிறது. தங்களின் அனுமதி இல்லாமல் சிஎஸ்கே அணி நிர்வாகம் தாங்கள் தயாரித்த பாடல்களை பயன்படுத்துவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.