IPL 2026: அத்துமீறிய ரசிகர்கள்.. அலறிய சியர் லீடர்கள்.. ஓடி வந்த காவலர்கள்.. என்ன நடந்தது?
லக்னோ: 2026 ஐபிஎல் தொடரில் நேற்று லக்னோவில் நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது, மைதானத்தில் இருந்த ஒரு சில ரசிகர்கள் பவுண்டரி எல்லை அருகே நடனமாடும் சியர் லீடர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் மைதானத்தில் அரங்கேறிய இந்தக் கசப்பான சம்பவம் விளையாட்டு ஆர்வலர்களிடையே கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் போட்டியின் போது, மைதானத்தின் ஒரு பகுதியில் நின்று நடனமாடிக் கொண்டிருந்த சியர் லீடர்களுக்கு அங்கிருந்த ஒரு சில ரசிகர்கள் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், பெண் போலீசார் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாகத் தலையிட்டு ரசிகர்களை எச்சரிப்பதும், சியர் லீடர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதும் பதிவாகியுள்ளது. மைதானத்தில் நிலவிய பதற்றத்தைத் தணிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். சியர் லீடர்களிடம் ரசிகர்கள் நடந்து கொண்ட விதம் ஐபிஎல் தொடரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகப் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆடுகளத்தில் பஞ்சாப் அதிரடி
மைதானத்தில் நிலவிய அசாதாரண சூழலுக்கு மத்தியில், ஆடுகளத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜோஷ் இங்லிஸ் 72 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் யுஸ்வேந்திர சாகல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 197 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணிக்கு, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் புயலாக மாறி 51 பந்துகளில் 101 ரன்கள் விளாசினார். இது அவரது முதல் ஐபிஎல் சதமாகும். அவருக்குத் துணையாக ஆடிய பிரப்சிம்ரன் சிங் 69 ரன்கள் சேர்த்தார். இறுதியில் 18 ஓவர்களிலேயே பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பஞ்சாப் அணியின் 6 தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
வெற்றி குறித்துப் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், "சரியான நேரத்தில் இந்தச் சதம் வந்ததில் மகிழ்ச்சி. இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்" என்றார். லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் தனது அணியின் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டார்.
தற்போது 15 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியின் பிளே-ஆப் வாய்ப்பு, இன்று நடைபெறும் மும்பை - ராஜஸ்தான் போட்டியின் முடிவைப் பொறுத்தே அமையும்.


Click it and Unblock the Notifications
