IPL 2026: கடைசி ஓவரில் மும்பை 3 சிக்சர்.. தொடர்ந்து 5வது போட்டியில் பஞ்சாப் அணி தோல்வி
தர்மசாலா: ஐபிஎல் 2026 தொடரின் பரபரப்பான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியில் நட்சத்திர வீரர் திலக் வர்மா முக்கிய பங்காற்றி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இந்த சீசனில் 200 ரன்களுக்கு மேல் இலக்கை துரத்தி மும்பை இந்தியன்ஸ் வெல்வது இது மூன்றாவது முறையாகும்.
மும்பை அணி ஏற்கெனவே பிளேஆஃப் வாய்ப்பை இழந்திருந்தாலும், இந்த வெற்றி பஞ்சாப் கிங்ஸ் அணிக்குத் தொடர்ச்சியாக ஐந்தாவது தோல்வியைப் பரிசளித்ததுடன், அவர்களது பிளேஆஃப் கனவுகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது.போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதனையடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்சிம்ரன் சிங் 31 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அணியின் அதிகபட்ச ஸ்கோரை அடித்தார். அவருக்கு ஈடுகொடுத்து ஆடிய பிரியன்ஷ் ஆர்யா 17 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். தீபக் சாஹர், ஆர்யா-வை ஆட்டமிழக்கச் செய்ய, ஷர்துல் தாக்கூர் பஞ்சாப் அணியின் சரிவுக்குக் காரணமாக அமைந்தார்.
பிரப்சிம்ரன் சிங்கின் அரைசதம் பஞ்சாப் அணியை 100 ரன்களைக் கடக்க உதவியது. ஆனால், ஷர்துல் தாக்கூர் பிரப்சிம்ரன் சிங்கை வெளியேற்றியதுடன், ஸ்ரேயாஸ் ஐயரை 4 ரன்களுக்கும், சூர்யான்ஷ் ஷெட்ஜே-வை 8 ரன்களுக்கும், மார்கோ ஜான்சனை ரன்கள் எடுக்க விடாமலும் வெளியேற்றி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஷர்துல் தாக்கூரின் சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசை பலவீனமடைந்தது. ராஜா பாவா கூப்பர் கானாலியை 21 ரன்களுக்கு அவுட் செய்ய, போஷ் ஷஷாங் சிங்கை 2 ரன்களுக்கு வெளியேற்றினார். கடைசியில், அஸ்மத்துல்லா ஓமர்சாய் 17 பந்துகளில் அதிரடியாக 37 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார், ஆனாலும் அவர் சாஹரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸின் பீல்டிங் மோசமாக இருந்தது, இறுதிக் கட்டத்தில் பல கேட்ச்களைக் கோட்டைவிட்டது. சேவியர் பார்ட்லெட் (15 நாட் அவுட்) மற்றும் விஷ்ணு வினோத் (18 நாட் அவுட்) உறுதியுடன் நின்று பஞ்சாப் அணியை 200/8 என்ற ஸ்கோரை எட்ட உதவினர்.
201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. ஒரு கட்டத்தில் ரன்ரேட் அழுத்தத்தை அதிகரிக்கத் தொடங்கியது. இருப்பினும், திலக் வர்மா மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஆட்டத்தின் கடைசி சில ஓவர்கள் மிகுந்த விறுவிறுப்புடன் அமைந்தன. அஸ்மத்துல்லா ஓமர்சாய் 16வது ஓவரில் ரன் கொடுக்காமல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி பஞ்சாப் அணிக்கு நம்பிக்கை ஊட்டினார்.
ஆனால், சஹால் வீசிய 15வது ஓவரில் திலக் வர்மா 106 மீட்டர் தூரத்திற்கு ஒரு பிரம்மாண்ட சிக்ஸர் அடித்து தனது அரைசதத்தைப் பதிவு செய்தார். அதே ஓவரில் ரூதர்போர்டும் ஒரு சிக்ஸர் அடிக்க, அந்த ஓவரில் 20 ரன்கள் கிடைத்தது. இது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது18 ஓவர் முடிவில், மார்கோ ஜான்சன் வீசிய பந்தில், திலக் வர்மா ஒரு சிக்ஸர் விளாச, அந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள் கிடைத்தது. இதன் மூலம் மும்பை அணி 173/4 என்ற நிலையில், 12 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டது.
ஒரு கட்டத்தில் திலக் வர்மாவுக்கு வலது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டதால் சிறுது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர் மீண்டும் பேட்டிங் செய்யத் தொடங்கினார்.கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. சேவியர் பார்ட்லெட் பந்துவீசினார். ஓவரின் முதல் பந்திலேயே வில் ஜாக்ஸ் ஒரு பிரம்மாண்ட சிக்ஸர் அடித்து அழுத்தத்தைக் குறைத்தார். பின்னர், அடுத்தடுத்த பந்துகளில் திறமையுடன் ஆடிய திலக் வர்மா, ஓவரின் 4வது மற்றும் 5வது பந்துகளில் சிக்ஸர்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
19.5 ஓவரிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி 205/4 ரன்கள் குவித்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. திலக் வர்மா (30 பந்துகளில் 63 ரன்கள்) இந்தப் போட்டியில் தனது அசாத்தியமான ஆட்டத்தால் வெற்றிக்குக் காரணமாக அமைந்தார்.இந்த வெற்றி மும்பை இந்தியன்ஸுக்கு ஒரு ஆறுதலாக அமைந்தாலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளேஆஃப் வாய்ப்புகளுக்கு இது ஒரு பெரும் பின்னடைவாகும். தொடர்ச்சியாக ஐந்தாவது தோல்வியைச் சந்தித்ததால், புள்ளிப் பட்டியலில் அவர்களின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
