கொல்கத்தா: 2026 ஐபிஎல் தொடரில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் விளையாடினால் மைதானத்தின் பிட்ச்சை சேதப்படுத்துவோம் என உஜ்ஜைனி சாமியார்கள் பேசி இருப்பது கிரிக்கெட் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
2026 ஐபிஎல் சீசனுக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி, வங்கதேசத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை 9.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இந்த சீசனில் ஏலம் போன ஒரே வங்கதேச வீரர் இவர்தான்.
ஆனால், இப்போது இவர் அணியில் இருப்பதே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. இவர் கடந்த 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியைச் சேர்ந்த மதத் தலைவர்கள் மற்றும் சாதுக்கள் கூட்டமைப்பு, முஸ்தபிசுர் ரஹ்மானை ஐபிஎல் தொடரில் அனுமதிக்கக் கூடாது எனக் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
உஜ்ஜைனி ரிண்முக்தேஷ்வர் மகாதேவ் கோயிலின் தலைமைப் பூசாரி மகாவீர் நாத் இதுகுறித்து ஆவேசமாகப் பேசுகையில், "வங்கதேசத்தில் இந்துக்கள் தொடர்ந்து வேட்டையாடப்படுகிறார்கள். எங்கள் சகோதரர்கள் அங்கே கொல்லப்படும்போது, வங்கதேச கிரிக்கெட் வீரரை இங்கே விளையாட அனுமதிப்பதை ஏற்க முடியாது. மீறி அவரை விளையாட வைத்தால், எங்கள் அகாராவைச் சேர்ந்த சாதுக்கள் மற்றும் போர்வீரர்கள் மைதானத்திற்குள் புகுந்து பிட்ச்சை தோண்டி சேதப்படுத்துவார்கள்" எனப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்தத் திடீர் எதிர்ப்புக்கு முக்கியக் காரணம், சமீபத்தில் வங்கதேசத்தில் அரங்கேறிய இரண்டு மனிதத்தன்மையற்ற சம்பவங்கள்தான். கடந்த டிசம்பர் 18-ம் தேதி, தீபு சந்திர தாஸ் (27) என்ற இந்து இளைஞர், மத நிந்தனைப் புகாரில் ஒரு கும்பலால் மோசமாக தாக்கப்பட்டு இறந்தார். இந்தச் சம்பவம் உலகையே உலுக்கியது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 24-ம் தேதி, அம்ரித் மண்டல் என்ற மற்றொரு இந்து இளைஞரும் அடித்துக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவங்களால் இந்தியாவில் உள்ள சில இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு மனநிலையில் உள்ளன. "இந்துக்களின் முகத்தில் அறைவது போல, வங்கதேச வீரருக்கு 9 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்கள்" என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகத்தை நோக்கி சமூக வலைதளங்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷங்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளர் திரேந்திர சாஸ்திரி ராய்ப்பூரில் பேசுகையில் இந்தச் சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். "வங்கதேசத்தில் இந்துக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். இந்திய அரசு இதில் தலையிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே இந்தியா - வங்கதேசம் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடரிலும் இந்த அரசியல் அனல் சூழ்ந்துள்ளதால் பிசிசிஐ மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் கலக்கத்தில் உள்ளன. முஸ்தபிசுர் ரஹ்மான் விளையாடுவாரா அல்லது புறக்கணிப்படுவாரா என்பது வரும் நாட்களில் தெரியும்.