IPL 2026: வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் கடவுளாக மாறுவார்.. அவர் ஒரு அதிசய குழந்தை..ஸ்ரீகாந்த் பாராட்டு
ஐபிஎல் 2026 சீசனில் கலக்கி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை முன்னாள் கரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் பாராட்டியுள்ளார். ஜெய்ப்பூரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில் சூர்யவன்ஷி காட்டிய அதிரடி ஆட்டமே இதற்குக் காரணமாகும்.
15 வயதான வைபவ், இப்போட்டியில் 36 பந்துகளில் தனது இரண்டாவது ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்தார் (முந்தைய சதம் 35 பந்துகளில்). கிறிஸ் கெய்லுக்குப் பிறகு, ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதங்கள் பட்டியலில் இரண்டாவது, மூன்றாவது இடங்களை அவர் பிடித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில், எட்டு ஆட்டங்களில் 357 ரன்கள் (சராசரி 44.62, ஸ்ட்ரைக் ரேட் 235) குவித்து ரன் குவிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "சச்சின் கிரிக்கெட்டின் கடவுள் என்றால், வைபவ் ஒரு நாள் கிரிக்கெட்டின் கடவுளாக மாறுவார். அவர் தொடர்ந்து 15 பந்துகளில் 50 ரன்களை அடித்து வருகிறார், இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. இந்த பையனின் நிலைத்தன்மை ஆச்சரியமாக இருக்கிறது. அவர் முதல் ஐந்தில் இருந்து ஆறு ஓவர்களுக்குள் ஒரு ஆட்டத்தை முடித்துவைக்கும் வீரராக உள்ளார். ராஜஸ்தான் அணி அவரது பேட்டிங் மற்றும் ஆர்ச்சர் பந்துவீச்சால் மட்டுமே தப்பிப் பிழைக்கிறது," என்று கூறினார்.
"உலகின் சிறந்த கேப்டனான கம்மின்ஸ் கூட, சூர்யவன்ஷியை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தார். அவர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை விட உயர்ந்துவிட்டார். விலா எலும்புப் பகுதியை குறிவைத்து வெளியேற்றலாம் என்று சன்ரைசர்ஸ் நினைத்தது, ஆனால் ஒவ்வொரு பந்தையும் அவர் பவுண்டரிக்கு விரட்டி அடித்தார்," என்றும் ஸ்ரீகாந்த் விமர்சித்தார்.
வைபவின் ஆட்டம், ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 228/6 என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எட்ட உதவியது. இருப்பினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இலக்கை கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரில் ஐந்து விக்கெட்டுகள் மீதம் வைத்து துரத்தி வெற்றி பெற்றது.
"அவர் இந்திய டி20 சர்வதேச அணிக்கு உடனடியாகச் சேர்க்கப்பட வேண்டும்," என ஸ்ரீகாந்த் இந்திய நிர்வாகத்தை வலியுறுத்தினார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்லவும் அவர் உதவினார். "அவர் உண்மையாகவே ஒரு அதிசயக் குழந்தை. உலகமே வியந்து பார்க்கிற அவரது பேட்டிங்," என்று ஸ்ரீகாந்த் புகழ்ந்தார்.
அவர் தொடர்ந்து, "பும்ரா, ஹேசில்வுட், நரைன் மற்றும் கம்மின்ஸ் போன்ற உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களை அவர் எளிதில் சிக்ஸர்களுக்கு விரட்டுகிறார். சிரமமின்றி சிக்ஸர்களை அடிப்பது அநியாயமாகத் தெரிகிறது. அவர் இந்தியாவின் அடுத்த டி20 போட்டியில் விளையாட வேண்டும்," என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
"இவரைப் போன்ற வீரர் அடிக்கடி கிடைப்பதில்லை. அவர் ஒரு தலைமுறைக்கு ஒருமுறை வரும் அரிய திறமைசாலி. அனைத்து பந்துவீச்சாளர்களும் அவரைக் கண்டு பயப்படுகிறார்கள். பேட்டிங் செய்யும்போது எந்த அழுத்தத்தையும் காட்டுவதில்லை. 50 அல்லது 100 அடித்த பிறகும் சலனமில்லை. கிராஸ் லைன் ஆடாமல், அவரது மணிக்கட்டு சுழற்சி மிக அருமையாக உள்ளது," என்றும் ஸ்ரீகாந்த் புகழ்ந்தார்.ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் அணி எட்டு ஆட்டங்களில் ஐந்து வெற்றிகளைப் பெற்றுள்ளது. வைபவ் சூர்யவன்ஷியின் அபாரமான பேட்டிங் ஃபார்மே இதற்கு முக்கிய காரணமாகும்.


Click it and Unblock the Notifications