வைபவ் சூர்யவன்ஷி முதல்ல ரஞ்சி டிராபி ஆடட்டும்.. அப்புறம் இந்தியாவுக்கு ஆடலாம் - மஞ்ச்ரேக்கர்
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி ஆரஞ்சு தொப்பி உள்ளிட்ட 5 விருதுகளை வாரிக் குவித்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை அவசரப்பட்டு இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வு செய்யக் கூடாது என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் எச்சரித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் வைபவ்வை சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. இது குறித்துப் பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மாவுக்குப் பிறகு இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வேண்டிய அடுத்த வீரர் வைபவ் தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரைத் தேர்வு செய்தால், ஆரம்பத்தில் ஆசியக் கண்டத்தில் உள்ள ஆடுகளங்களில் மட்டுமே விளையாட வைக்க வேண்டும். நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற கடினமான வெளிநாட்டு ஆடுகளங்களில் அவரை நேரடியாகக் களம் இறக்குவது சரியான முடிவாக இருக்காது" என்றார்.

வைபவ் சூர்யவன்ஷியின் டெஸ்ட் கிரிக்கெட் லட்சியம் குறித்துப் பேசிய மஞ்ச்ரேக்கர், "அவரை எவ்வாறு கையாளுவது? அவர் சிவப்பு பந்து (டெஸ்ட்) கிரிக்கெட்டில் எப்படி விளையாடுவார்? என்பது குறித்துப் பலரும் பேசி வருகின்றனர். அவரை வழிநடத்துவது நமது வேலையோ அல்லது பிசிசிஐ-யின் வேலையோ அல்ல. அவர் ஒரு தனிநபர், அவர் தனது வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். ஐபிஎல் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடியதற்காக அவரை டெஸ்ட் அணிக்குத் தேர்வு செய்வது தவறானது" என்று கூறினார்.
மேலும் பேசிய மஞ்ச்ரேக்கர், "பீகார் ரஞ்சி கோப்பை அணியில் பல வீரர்கள் பல ஆண்டுகளாகக் கடுமையாக உழைத்து விளையாடி வருகின்றனர். அவர்களின் உழைப்பைத் தாண்டி, டி20 ஆட்டத்தை மட்டும் வைத்து வைபவ்வை டெஸ்ட் போட்டிக்குத் தேர்வு செய்வது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். வைபவ் ரஞ்சி கோப்பை மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்பினால், அவர் முதலில் ரஞ்சி அணியில் தனது இடத்திற்காகப் போராடி, தனது திறமையால் அந்த இடத்தைச் சம்பாதிக்க வேண்டும்" என்று தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
இந்தியா ஏ அணியில் வாய்ப்பு
2026 ஐபிஎல் சீசனில் 237.31 என்ற அதிரடி ஸ்டிரைக் ரேட்டுடன் 776 ரன்கள் குவித்த வைபவ், 3 முறை சதம் அடிக்கும் வாய்ப்பை 90-களில் தவறவிட்டார். எலிமினேட்டர் போட்டியில் 97 ரன்களும், இரண்டாவது தகுதிச் சுற்றில் 96 ரன்களும் எடுத்து அவர் அசத்தியிருந்தார். வைபவ் வரும் ஜூன் 9-ம் தேதி முதல் இலங்கையில் தொடங்கவுள்ள ஆப்கானிஸ்தான் ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு எதிரான மூன்று நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் தொடரில் 'இந்தியா ஏ' அணிக்காக விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
