IPL 2026: எங்கே பார்த்தாலும் வைபவ் சூர்யவன்ஷி.. தோனி, சச்சினுடன் ஒப்பிட்டு பேசிய முன்னாள் வீரர்கள்
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் 100 கோடிக்கும் மேலான ரசிகர்கள் பட்டாளத்தை தனது பக்கம் திருப்பியுள்ளார் ஒரு 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி. சச்சின் டெண்டுல்கர் மற்றும் மகேந்திர சிங் தோனி போன்ற ஜாம்பவான்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய அந்த ஒரு 'அபூர்வமான ஈர்ப்பு' இப்போது இந்த இளம் வீரருக்குக் கிடைத்துள்ளதாக இந்திய முன்னாள் வீரர் மோகித் சர்மா கூறி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் திறமைகளுக்குப் பஞ்சமில்லை என்றாலும், வைபவ் சூர்யவன்ஷியின் வரவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா கூறுகையில், "இந்திய கிரிக்கெட்டில் இதுவரை நான் இரண்டு வீரர்களை மட்டுமே இப்படிப் பார்த்திருக்கிறேன். முதலாவது ஆள் மகேந்திர சிங் தோனி. அவர் எந்த மைதானத்திற்குச் சென்றாலும், எந்த அணிக்கு எதிராக விளையாடினாலும் ஒட்டுமொத்த மைதானமும் அவருக்காகத் தான் குரல் எழுப்பும். அத்தகைய ஒரு அன்பையும் வசீகரத்தையும் இப்போது இந்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷியிடம் பார்க்கிறேன்" என்று வியந்து கூறியுள்ளார்.

வைபவ் மைதானத்திற்குள் நுழைந்தாலே வர்ணனையாளர்கள், கேமராமேன்கள் மற்றும் எதிரணி வீரர்கள் என அனைவரும் அவரிடம் பேசத் துடிப்பதாக மோகித் சர்மா சுட்டிக்காட்டியுள்ளார். 15 வயதிலேயே உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்வதும், அனாயசமாக சிக்ஸர்களைப் பறக்கவிடுவதும் இவரை ஒரு அதிசய வீரராக மாற்றியுள்ளது.
இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற முரளி கார்த்திக், வைபவ் சூர்யவன்ஷியை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டுப் பேசினார். "15 வயதில் நாம் யாருடைய ஆட்டத்தைப் பார்த்திருக்கிறோம் என்று யோசித்தால், சச்சின் டெண்டுல்கரின் பெயர் தான் நினைவுக்கு வரும். இன்று கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளிலும் வைபவ் என்ற பெயர் உச்சரிக்கப்படுகிறது. இது ஒரு கடவுள் கொடுத்த வரம்" என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ், 400 ரன்களைக் கடந்து ஆரஞ்சு தொப்பிக்கான பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 238.09 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் அவர் ரன் குவித்து வருவது சீனியர் வீரர்களையே பொறாமைப்பட வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications