“என்னையா டக் அவுட் ஆக்கினாய்?” பவுலரை வஞ்சம் தீர்த்த வைபவ் சூர்யவன்ஷி.. ஒரே ஓவரில் 4 சிக்சர்!
ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். கடந்த முறை தன்னை சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆக்கிய அதே பந்துவீச்சாளரின் முதல் ஓவரிலேயே வரிசையாக 4 சிக்சர்களை பறக்கவிட்டு அவர் பழிதீர்த்துக் கொண்ட சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை பெருமளவு வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே அவர் காட்டிய இந்த அசுரத்தனமான அதிரடி மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி, நடப்பு ஐபிஎல் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா, ஜோஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் போன்ற உலகத்தரம் வாய்ந்த முன்னணி பந்துவீச்சாளர்களின் ஓவர்களிலேயே சிக்சர் மழை பொழிந்து மிரட்டி வருகிறார். ஆனால், சில வாரங்களுக்கு முன்பு ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த லீக் போட்டியில், அந்த அணியின் பந்துவீச்சாளர் பிரபுல் ஹிங்கே வீசிய முதல் பந்திலேயே வைபவ் சூர்யவன்ஷி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். எந்த பவுலரையும் தெறிக்கவிடும் அவருக்கு, அந்த விக்கெட் வீழ்ச்சி தனிப்பட்ட முறையில் பெரும் அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் அமைந்தது.

இந்த நிலையில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரு அணிகளும் மீண்டும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ராஜஸ்தான் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. ஹைதராபாத் அணியின் முதல் ஓவரை வீச, கடந்த முறை விக்கெட் எடுத்த அதே பிரபுல் ஹிங்கே அழைக்கப்பட்டார். அவர் வீசிய முதல் பந்தை சந்தித்த ஜெய்ஸ்வால் 1 ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை வைபவ் வசம் ஒப்படைத்தார்.
ஆட்டத்தின் 2வது பந்தில் தனது முதல் பந்தை சந்தித்த வைபவ் ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்து பொங்கியெழுந்த அவர், அடுத்தடுத்த பந்துகளில் விஸ்வரூபம் எடுத்தார். 3, 4, 5 மற்றும் 6வது பந்துகளை சற்றும் ஈவு இரக்கமின்றி வரிசையாக சிக்சருக்கு தூக்கி பவுண்டரி எல்லைக்கு வெளியே அனுப்பினார். இதன் மூலம் அவர் அந்த ஓவரில் தான் சந்தித்த 5 பந்துகளில் 24 ரன்களை குவித்து மிரள வைத்தார். தன்னை டக் அவுட் ஆக்கிய அதே பவுலரை, அதே முதல் ஓவரில் கதறவிட்டு வைபவ் சூர்யவன்ஷி தனது வஞ்சத்தை தீர்த்துக்கொண்டதை ராஜஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
